சனி, 13 மே, 2017

வன்னியக்குல மாநாட்டில் பெரியார்


சும்மா இருக்கிறதுக்கு இல்லாமல் பெரியாரை சாதி சங்க மாநாட்டுக்கு கூப்பிடப் போய், அவர் அங்கே போய் பொளந்து கட்டியிருக்கார்.
டைனோசரை கொண்டுபோய் மாநாட்டில் விடுவானேன். அப்புறம் மிதிச்சிடுச்சு, நசுக்கிடுச்சுன்னு பொலம்புவானேன்.
-----------------
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் பெரியார்
சகோதரர்களே,
பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள்.
இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது.
உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள்.
ஆனால் உங்கள் சத்திரிய தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை.
நீங்கள் வன்னியர்குல சத்திரியர் என்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல சத்திரியர்ரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
அவர்கள் பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல.
ஆனால் நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள்.
நீங்களும் அதுபோலவே நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள்.
கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.
நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் சத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள்தான் சத்திரியர்கள் என்கிறார்கள்.
ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சத்திரியர்கள் என்கின்றார்கள்.
சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சரியான சத்திரியர்கள் என்கிறார்கள்.
இதுபோல் இன்னமும் குடகு சத்திரியர்கள் எத்தனையோ பேர் சத்திரிய பட்டத்திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும் சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கின்னம் கழுவுகவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது.
அப்படி கிடைக்கப்பெற்ற அந்த பிச்சை தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு மகாநாடு கூட்டி, சத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான்.
அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரை குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை.
உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான்.
ஆகவே இந்த மாதிரி இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்தமற்றதுமான காரியங்களுக்கு இம்மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தால் இம்மகாநாடுகள் அழிந்துபோவதே மேல் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன்.
தங்கள் ஜாதி உயர்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாகவும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.
இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம்.
ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல; சத்திரியர் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள்; நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்துவிட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக்கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த சோம்பேறி செளக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படதக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.
ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை; நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்மநிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
பெரியார்(1-6-1930 குடிஅரசு)

செவ்வாய், 2 மே, 2017

விஸ்வ கர்ம ஜெயந்தியாம்!

விஸ்வ கர்ம ஜெயந்தியாம்!


உலகம் முழுவதும் மே முதல் நாள் தொழிலாளர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் - தனது சர்வதேச சித்தாந்த திணிப்புத் தந்திரத்தின் அடிப் படையில் இந்த மே தினம் திணிக்கப்பட்டுள்ளதாம். அழுத்த மான தேசிய கலாச்சாரம் கொண்ட பாரதம் அதற்குத் தலைவணங்கக் கூடாதாம். மாறாக செப்டம்பர் 17 அன்று ‘விஸ்வ கர்ம ஜெயந்தி’தான் கம்பீரமான தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படவேண்டும். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள பூங்காவிற்கு தி.மு.க. ஆட்சியில் மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது அல்லவா - அந்தப் பெயரை நீக்கிவிட்டு, ‘‘விஸ்வ கர்மப் பூங்கா’’ என்று பெயர் சூட்டப்படவேண்டுமாம்.
இவ்வளவையும் எழுதுவது - ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (5.5.2017).
எதிலும் இந்தக் கூட்டத்திற்குப் பார்ப்பனக் கலாச்சாரப் பார்வைதான் - அதைத்தான் இந்துக் கலாச்சாரம் என்று பெயர் சூட்டுவார்கள்!
இந்துத்துவா பார்வையில் சொல்லவேண்டுமானால், தொழிலாளர்கள் கடினமான வேலை செய்வது - போதிய வருவாயின்றி அல்லல்படுவது என்பது எல்லாம் - கர்மப் பலன் என்பதே! அதற்காகப் போராடுவது என்பதுகூட கர்மப்பலனுக்கு எதிரான ஒன்றே!
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் மே தினம் இந்த இந்துத்துவாவின் இடுப்பு எலும்பை முறிக்கும் நாளாகக் கொண்டாடப்படவேண்டும். அந்நாளில் இந்துத்துவாவின் தோலை உரிக்கும் பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் மேற்கொள்வதே சரியானதாக இருக்க முடியும்.
சூத்திரர்கள் யார் என்று மனுதர்ம சாத்திரம் கூறுவதைக் கவனித்தால் தொழிலாளர்கள் பற்றிய பார்ப்பனீயத்தின் கண்ணோட்டம் எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.
சூத்திரன் என்றால் யார்? இதோ இந்துத்துவாவின் மனுதர்மம் கூறுகிறது.
‘‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன்; பக்தியி னால் வேலை செய்கிறவன்; தன்னுடைய தேவடியாள் மகன்; விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப் பட்டவன்; குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய் கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் எனத் தொழி லாளிகள் ஏழுவகைப்படுவர்’’ (மனுதர்மம், அத்தியாயம் 8; சுலோகம் 415).
இதன்மூலம் அறியப்படுவது என்ன? சூத்திரர்கள் என்றால், தொழிலாளர்கள்தான். தேவடியாள் மகன் உள்பட ஏழுவகைப்படுவர் என்பதுதானே இந்து மதம்? இந்து ராஜ்ஜியத்தைக் கொண்டுவரத் துடிப்பவர்களின் தொழிலாளர் கொள்கை எத்தகையது என்பது விளங்கவில்லையா?
விவசாயத்தைப் பாவத் தொழில் என்று கூறும் மனு தர்மத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள்  தொழிலாளர்கள்பற்றிப் பேசிட சற்றும் தகுதி உடையவர்கள்தானா?
மன்னார்குடி அரசில் உள்ள வடுவூர் (1921) என்னும் கிராமத்தில் ஒரு பார்ப்பனக் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டது என்பதற்காக, அவர்கள் கொடுத்த தட்சணையை வாங்கிட மறுத்தவர்தான் (மறைந்த) காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்; பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார் சங்கராச்சாரியார்.
அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டனர். ‘‘கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவது ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும்‘’ என்று பதில் எழுதியவர் காந்தியார்.  (ஆதாரம்: ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’, பக்கம் 378).
‘‘மே முதல் நாளை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். இதழ் சொல்லும் காரணம் விசித்திரமானது.
1884 இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் வேலை நேரம் எட்டு மணிநேரமாக நிர்ணயிக்கவேண்டுமென தொழி லாளர்களும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையில் முடிந்து போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 6 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 4 ஆம் தேதியன்று நடத் திய போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கும், போலீசிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் காயமடைந்தனர். 4 தொழிலாளர்களுக்குத் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்டது. இந்த துக்க சம்பவம்தான் மே தினத்திற்கு உருவம் கொடுத்தது. 1920 இல் ரஷ்யா முதல் முறையாக மே 1 ஆம் தேதி விடுமுறை அறிவித்தது.
இந்தியக் கலாச்சாரத்திற்கு இந்தக் கொண்டாட்டம் ஏற்றதல்ல. ஏனெனில் மரணமடைந்த சம்பவம் துக்க தினம்; அதைக் கொண்டாடுவது நமது மரபல்ல’’ என்று எழுதுகிறது ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதம்.
அப்படியென்றால், இந்து மதத்தின் முக்கிய பண்டி கையான தீபாவளியைக் கொண்டாடலாமா? தீபாவளி என்பது நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் அல்லவா? ஓணம் பண்டிகையைத்தான் கொண்டாடலாமா? மகாவிஷ்ணு குள்ளப் பார்ப்பான் (வாமன அவதாரம்) உருவெடுத்து மாவலி சக்ரவர்த்தியைக் கொன்ற நாள்தானே இந்து மதத்தின் ஓணம் பண்டிகை.
தீபாவளியையும், ஓணத்தையும் கொண்டாடக்கூடாது - காரணம் அவை கொலையை அடிப்படையாகக் கொண் டவை - அது, பாரத கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்று அடுத்த இதழ் ‘விஜயபாரதத்தில்’ அறிவிப்பு வெளிவருமா?
எங்கே பார்ப்போம்!


Read more: http://www.viduthalai.in/page-2/142239.html#ixzz4fw4glAz4