வெள்ளி, 14 ஏப்ரல், 2017

அம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்


அம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்

தியாகச் செம்மல்
COMMENT (1)   ·   PRINT   ·   T+  

அம்பேத்கர் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தளங்களில் அவரது புகழ் பேசப்பட்டும் எழுதப்பட்டும் பரப்பட்டும் வருகிறது.
மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மற்றும் இடதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் எடுத்து கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த தினத்தில் அவரை பற்றி பேசுவது எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட வேண்டிய ஒன்று அவர் இறுதி வரை குரல் கொடுத்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலை இன்று எவ்வாறு உள்ளது என்பது குறித்து தான்.
அந்த விவாதத்தையும் அம்பேத்கரில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது, சட்ட மேதையாக அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றியவராக புகழப்பட்டாலும், அவரை ஒரு தலித்தாக பார்த்து அவர் படத்தை கூட மாட்டி வைப்பதில் மிகப் பெரிய தயக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்ததை வரலாற்றின் கருப்பு பக்கங்கள் குறித்து வைத்துள்ளன. ஏன் தமிழ்நாட்டின் ஒரு நீதிமன்றத்தில் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்ற கூறிய ஒரு நீதிபதியின் செயலுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி மீண்டும் அம்பேத்கர் படம் வைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை கட்டாயம் மாட்ட வேண்டும் என்று திமுக ஆட்சியிலிருந்த போது அரசாணையே வெளியிடப்பட்டது. இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கூட அந்த அரசாணையை முறையாக அமல்படுத்தக் கோரி அருந்ததியர் மக்கள் இயக்கம், ஆதி தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அம்பேத்கர் படத்திற்கான அரசாணை குறித்த விவரங்களை அறிய எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரை தொடர்பு கொண்ட போது “ அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு வலியுறுத்துவது எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு தேவையானது, தலித் மக்களின் பாதுகாப்புக்கான தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அமைப்பது, தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான், இட ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஓரளவு வாய்ப்புகளை உருவாக்கி தந்த திராவிட கட்சிகள் ஆண்ட இங்கே ஒரு ஆணையம் அமைப்பதில் பல்வேறு அரசியல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதை, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நான் நேரில் கண்டிருக்கிறேன்” என்றார். அம்பேத்கர் படத்தை கூட மாட்டுவதற்கு ஒரு இடத்தில் தயக்கம் காட்டப்படுகிறது என்றால் அங்கு ஒடுக்குமுறையும் தீண்டாமையும் நிலவுகிறது என்பது தானே அர்த்தம், படமானாலும் சிலையானாலும் பெரும் தடைகளுக்கு பிறகே அம்பேத்கரை நிலை நிறுத்த முடிகிறது என்றார் ரவிக்குமார்.
அம்பேத்கரின் அரசியல் அறிவும், மொழி ஆளுமையும் மிகவும் நுட்பமானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பெயரை பதிவு செய்யும் போது கூட SCHEDULED CASTE, SCHEDULED TRIBE என்று வார்த்தைகளை கோர்கிறார், அதாவது அரசியலமைப்புச் சட்டப்படி SCHEDULED என்னும் போது பட்டியலிடப்பட்ட மக்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அப்படி பட்டியலிடப்படும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை சார்ந்த வற்றில் பொறுப்பாளராக இந்த நாட்டின் குடியரசு தலைவர் மாறுகிறார். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கான தேசிய தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது அபரிமதமானது(ஆனால் அவற்றை முழுவதுமாக பயன்படுத்துவதுமில்லை, பயன்படுத்துவதற்கான அரசியல் சூழலும் இல்லை). அப்படிபட்ட ஒரு ஆணையத்துக்கான வாய்ப்பை தமிழகம் இத்தனை ஆண்டுகள் மறுத்து வருவது ஏற்புடையதா ? தற்போது தமிழகத்தில் விழித்து பார்த்திரு என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தலித் மக்களின் பாதுகாப்புக்கு என்று ஒரு குழு உள்ளது. மேலும் இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை முதலமைச்சர் தலைமையில் கூடி தலித் மக்களின் நிலை குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த குழுவின் கூட்டம் நடைபெறவில்லை.
தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் அதே வேளையில் சாதி பாகுபாட்டை அழித்தொழித்தல் குறித்த ஒரு தீவிர பிரச்சாரமும் இங்கு முன் எடுக்கப்பட வேண்டும். மேலும் அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக முன் நிறுத்தும் அரசியலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பது தீராத சோகம். அம்பேத்கரின் போராட்டம் முதலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே முன்னுரிமை வழங்கியது. ஏன் அவர் இயற்றிய சட்டங்களும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உரத்து குரல் கொடுத்தது, ஆனால் இன்று அம்பேத்கரை தீவிரமாக எதிர்ப்பவர்களில் பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு சாரார் இருப்பது வரலாற்று வேதனையை ஏற்படுத்துகிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் இடையே அதிகரிக்கும் வன்மம், ஆணவக் கொலை, தீண்டாமை என அம்பேத்கரின் கனவுகளை சுக்கு நூறாய் உடைத்து எரியும் சம்பவங்கள் அரங்கேறும் வேளையில் அவரை மீள் வாசிப்பதும், அவர் கருத்துக்களை சமூக எண்ணத்தின் மாற்றத்துக்காக தீவிரமாக பயன்படுத்துவதுமே, இலக்கு நோக்கிய பயணத்துக்கு சரியான திசையை காட்ட முடியும். அதுவரை அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அடையாளமே.
“அடையாளமாய் நில்லாமல் அவசியமாய் மாறட்டும் அண்ணலின் பிறந்த நாள்”.....
தியாகச் செம்மல், தொடர்புக்கு: thiyagachemmel.st@thehindutamil.co.in

மோடியின் அம்பேத்கர்


மோடியின் அம்பேத்கர்

செல்வ புவியரசன்

இந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அம்பேத்கர் ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார். அதுவே அவருக்கும் தண்ணீருக்குமான தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய அம்சம்.
ஒடுக்குமுறையின் கருவி
அம்பேத்கரின் பிரபலமான புத்தகங்களில் ஒன்று, `சாதியை அழித்தொழித்தல்’. அதில் இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு தண்ணீரைப் பெறும் உரிமை எப்படியெல்லாம் மறுக்கப் படுகிறது என்பதை அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
1928-ல் மத்திய இந்தியாவில் தலித்துகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி நடக்கும்போது கிராமத்துக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். 1935-ல் குஜராத்தில் தலித் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்கு உலோகக் குடங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். தடையை மீறி உலோகக் குடங்களைப் பயன்படுத்திய பெண்கள் தாக்கப்பட்டனர்.
தலித்துகள் மட்டுமல்ல, அவர்கள் வளர்த்துவந்த கால்நடைகள்கூட பொது நீர்நிலைகளில் நீர் அருந்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகைச் செய்திக் குறிப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனுக்கள் ஆகியவற்றையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமை மறுக்கப்பட்டதை அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்திற்கு அருகதை உள்ளவர்கள்தானா என்ற அம்பேத்கரின் கேள்வி இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.
தண்ணீரைப் பெறுவது அடிப்படை உரிமை
அரசியல் சட்ட விவாதத்தின்போது அம்பேத்கர் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்ட விஷயங்களில் தண்ணீர் உரிமையும் ஒன்று. சாதி, சமயம், பாலினம் என்று பாகுபாடுகள் காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி அவர் முன்வைத்த வரைவில் நீர் உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆறுகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் மனிதர்களிடையே பாகுபாடு கூடாது என்று அவரது வரைவு அழுத்தம் கொடுத்தது.
சட்டத்தினாலன்றி வேறு எந்தவொரு காரணத்தாலும் பொதுப் பயன்பாட்டுக்கான கிணற்றிலும் நீர்நிலைகளிலும் ஒருவர் தண்ணீர் எடுப்பதைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அவர் முன்வைத்த வரைவுதான் அரசியல் சட்டத்தின் ஷரத்து 15-ஆக வடிவம் கண்டுள்ளது. ஷரத்து 15(2)-ன்படி, பொதுப் பயன்பாட்டுக்காகப் பொது நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் அல்லது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று அடிப்படை உரிமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் சட்ட விவாதத்தின்போது தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையை வலியுறுத்தி அவர் வாதாடியபோது அதற்கு ஆதாரமாகக் காட்டியது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளைத்தான். மதராஸ் மாகாண வருவாய் வாரியப் பதிவுகள் எண். 723-ன்படி (நவம்பர் 5, 1892) வட தமிழகத்தின் தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமையில் பாகுபாடு காட்டப்பட்டது உறுதியாக தெரிந்தது. அவர்களோடு முரண்பாடு வரும்போதெல்லாம் அவர்களது வயல் வரப்புகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
குஜராத் நிலவரம்
இதெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய கதை, இப்போது அதைப் பற்றி பேசுவது சரியா என்ற கேள்வி எழலாம். அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டபோதும்கூட இன்னும் தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையில் பாகுபாடுகள் நீங்கவில்லை என்பதுதான் உண்மைநிலை. யுனிசெப் நிறுவனம் 2013-ல் ‘இந்தியாவில் நீர்வளம்- நிலையும் வாய்ப்புகளும்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவைப் பொறத்தவரை, தண்ணீர் என்பது ஓர் அரசியல் பிரச்சினையாகவே இன்னும் இருக்கிறது. வகுப்பு, சாதி, பாலினம் முதலிய வேறுபாடுகள் நீரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பில் பாகுபாடு நிலவ காரணமாக இருக்கின்றன.
இந்தச் சிக்கலுக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ள தீர்வு, குடிநீர்க் குழாய் இணைப்புகள். இந்தியக் கிராமப்புறங்களில் தலித்துகள் தற்போது குடிநீர் பெறுவதில் பாகுபாடு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்றால் அது சமூக மனமாற்றத்தால் அல்ல, குடிநீர்க் குழாய் இணைப்புகளின் வழியாகத்தான். ஆனால் இந்த தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தண்ணீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால், உலக மக்கள்தொகையில் 16% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால் உலக நன்னீர் வளத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 4% மட்டும்தான்.
யுனிசெப் அறிக்கையில், குஜராத்தில் 2001-ல் தொடங்கப்பட்ட தண்ணீர் மற்றும் கழிவு அகற்றல் மேலாண்மை அமைப்பின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத்தின் கிராமப்புறங்களில் நீர்ப் பகிர்வுத் திட்டங்களை சமூக பங்கேற்புடன் நடத்துவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். ஆனால் அங்கும்கூட தலித்துகள் இனத்தவர்கள் பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
உரிமையா, மேலாண்மையா?
அனைவரும் சரிசமமாக நீரைப் பயன்படுத்தும் உரிமையைத்தான் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் மோடியின் அரசோ அவரை நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்த முன்னோடி என்று மட்டுமே சித்தரிக்கிறது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய கொள்கைகளை விலக்கி வைத்துவிட்டு, அவரிடமிருந்து இணக்கமான அடையாளத்தை மட்டும் எடுத்தாள்வது மோசமான அரசியல் தந்திரம்.
அம்பேத்கரின் பெயரில் பணமில்லா பரிவர்த்தனைக்கான ‘பீம் ஆப்’ என்ற செல்போன் செயலியையும்கூட மோடி அறிமுகப் படுத்தியுள்ளார். தான் பிரதமராவதற்குக் காரணமே அம்பேத்கர் தான், அவர்தான் தனக்கு உந்துசக்தியாக இருந்தார் என்று அம்பேத்கர் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவின்போது மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் மட்டுமல்லர், மனித குலத்தின் தலைவர் என்ற மோடியின் வார்த்தைகள் 100% உண்மை.
அம்பேத்கர் பல பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் ஆளுமை. அவரது பொருளாதாரச் சிந்தனைகள் மோடிக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால் அம்பேத்கரின் ஆரம்பக்கால பொருளியல் ஆய்வுகளைக் காட்டிலும் அவர் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மேற்கொண்ட சமூகப் பகுப்பாய்வுகளே முக்கியமானவை.
அம்பேத்கரின் பொருளியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அவரின் சமூகப் பகுப்பாய்வுகளையும் அவர் முன்னிறுத்திய சமய தத்துவங்களையும் மோடி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுகிறார். அம்பேத்கருக்கும் நீருக்குமான தொடர்பும்கூட அப்படித்தான். அம்பேத்கர் வலியுறுத்தியது நீர் உரிமை. மோடி பேசுவது நீர்மேலாண்மை.
செல்வ புவியரசன்

திங்கள், 10 ஏப்ரல், 2017

அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!

இந்தியாஇந்துத்துவம்சமூக நீதிசர்ச்சை

இந்துத்துவ அம்பேத்கர்: அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!

பறையர் என்ற காரணத்தினால், ஒரு நபரை முன்வைத்து அம்பேத்கருக்கு இந்துத்துவ முலாம் பூச முயற்சி எடுத்து வருகிறது இந்துத்துவ கும்பல். அதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்களாகவே, முற்போக்கு முகாம் இருக்கிறது என்பதும், அம்பேத்கரின் எழுத்துகள் இன்னும் தீண்டத்தகாததாகவே இருப்பதுவும் உண்மை என்பதை எவரும் மறுக்கலாகாது.
அம்பேத்கருக்கு இந்துத்துவ பெயிண்ட் அடிக்க அனுமதித்துக் கொண்டிருந்தால், தலித்’ என்று அழைக்கப்படும் பட்டியல்சாதி மக்களின் கரங்களாலேயே முற்போக்காளர்களுக்கு எதிரான வன்முறைகளை இந்துத்துவ கும்பல் பரவலாக்கும் என்பதை எச்சரிக்கையாக கொள்ள வேண்டும்.
சாதி ஒழிய இந்து மதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட சனாதன தருமத்திற்கும் நடந்த போர் என்கிறார் அம்பேத்கர்.
சாதி வேரூன்றியிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் படுகிற துன்பத்திற்கு காரணம் அவர்கள் சாதி இந்துக்களை அண்டி பிழைக்க வேண்டிய நிலை இருப்பதால் என்று பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சொத்து ஓரிடத்தில் குவிந்து கிடக்கச் செய்யும் சனாதன தருமத்தின் ஏற்பாடு அயோக்கியத்தனமானது என்கிறார் அம்பேத்கர். சொத்துகள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் வேண்டும் என்கிறார். ஆனால், இது எதையும் பேசாமல் சாதி ஒழிய வேண்டும் என்கிறது இந்துத்துவம். அதாவது, பண்ணையார்களின் கட்சியான பாஜக சாதி ஒழிய வேண்டும் என்கிறது. பண்ணையார்களுக்கும், ஆதிக்க சாதிகளுக்கு நோகாமல் எப்படி சாதி ஒழியும்.
மானுடவியலின் அடிப்படையில் ஆரிய-திராவிட கோட்பாடு பிழையானது என்று கூறும் அம்பேத்கர். தமிழகத்துக்கு பார்ப்பனர்களுக்கும், தமிழக பறையருக்கும் இருக்கும் தொடர்பு, வங்காள பார்ப்பனர்களுக்கும், தமிழக பார்ப்பனர்களுக்கு உள்ள தொடர்பைவிட நெருக்கமானது என்கிறார்.
ஆனால், இந்தியாவெங்கும் நிலவும் பார்ப்பன பண்பாட்டின் அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனை ஒன்று இருப்பதை அவர் மறுக்கவில்லை.
இந்த மண்ணின் பூர்வீக பழங்குடிகள் என்று நாகர்களை சுட்டும் அம்பேத்கர். ஆரிய, பார்ப்பன கும்பல் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று எங்கும் சுட்டவில்லை.
பின்னர் வந்திணைந்தவர்கள் திராவிடர்கள் என்றும், பின்னர் ஆரியர்கள் வந்தனர் என்கிறார். அது மட்டுமில்லாமல், இன்றைய பார்ப்பனர்கள், தங்களை ஆரியர்களின் வாரிசாக அறிவித்துக் கொள்கிறவர்கள், தங்களது முன்னோர்களின் அசிங்கமான பண்பாட்டை தங்களது என்று இன்று உரிமை கொள்ள துணிய மாட்டார்கள் என்று எள்ளி நகையாடுகிறார்.
ஆரிய-திராவிட கோட்பாட்டை அண்ணல் அம்பேட்கர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்வதன் மூலம் இந்த இந்துத்துவ கும்பல் பெரியாரின் திராவிட இயக்கத்தின் வரலாற்று பங்கை மறுக்க பார்க்கிறது. ஆனால், அம்பேத்கர் அதன் வரலாற்று பாத்திரத்தை அங்கீகரிக்கிறார். பார்பனரல்லாதோர் இயக்கம் வர்ணாசிரம கோட்பாட்டை தலைகீழாக மாற்றியமைக்க முயற்சி செய்தது என்கிறார். அங்கீகரிக்கிறார். அதிகார பங்கீடு என்று வரும் போது, உயர்சாதி இந்துக்கள் பங்கு போடுவதாக மாறிவிட்டதாக வருந்துவதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், இந்துத்துவ கும்பலின் வருத்தம் வேறானது. பாஜகவில் இந்தியாவெங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இதே உயர்சாதி வெறி பிடித்த கும்பல்தான்..
வன்முறை பாதையில் புரட்சியை முன்னெடுத்து சென்றால், பின்னர் துப்பாக்கி முனையில் புரட்சியை எப்படி தக்க வைப்பது. பொதுவுடமை தோழர்கள், பண்பாட்டு தளத்தில் பௌத்த நெறியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனையும் அண்ணல் அம்பேட்கர் முன்வைக்கிறார். அன்றைய கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையோடு அண்ணல் அம்பேட்கருக்கு முரண் இருந்தது என்பது மறுப்பதிற்கில்லை.
ஆனால், அதே காலத்தில் அண்ணல் அம்பேட்கர் இந்துத்துவ கும்பலுக்கு கடும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்பதும் மறுப்பதிற்கில்லை. சாவர்க்கர் அண்ணல் அம்பேதுகரின் பௌத்த மதமாற்ற முடிவை துரோகத்தன்மை கொண்டது என்றும், அது வீழ்த்தப்பட வேண்டும் என்றுதான் தன்னுடைய இந்துத்துவம் தொடர்பான நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், ம.வெங்கடேசன் போன்ற திரிபுவாதிகள் அம்பேத்கருக்கு காவி வர்ணம் பூச முயல்கின்றனர்.
கீதைக்கு நேரதிரான சித்தாந்தம் கொண்டது பௌத்தம், அதாவது, போர் செய்து சொந்த சகோதரர்களாயினும் கொலை செய்வது சத்ரிய தருமம் என்கிறது கீதை.  கொலை செய்ய முடியாது என்கிறார் புத்தர்.
இதில் இந்துத்துவ கிளை மதம் என்று பௌத்தத்தை ஏற்றுக் கொண்டதாம்…
இந்தியா, பாகிஸ்தான் இணைந்திருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவும், அகண்ட பாரத கனவும் ஒன்றென கூறும் ஏமாற்று வேலையை செய்கிறது இந்துத்வம். பாகிஸ்தான் தொடர்பான சிந்தனை தொடர்பான நூலில் இந்து ராஜ்யமே ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்…அப்படியிருக்க அகண்ட பாரத கனவோடு அம்பேத்கரின் எண்ணம் எப்படி ஒத்துப் போகும்?
ஊருக்கொரு சட்டம், சேரிக்கொரு சட்டம் என்று நடைமுறையில் இருக்கும் நாட்டில்…அண்ணல் அம்பேத்கரின் பொது சிவில் சட்ட நோக்கம் என்பது சமத்துவத்திற்கானது…இந்துத்துவ கும்பல் கோரும் பொது சிவில் சட்டம் அத்தகையது அல்ல..இஸ்லாமியர்கள் தங்கள் பண்பாட்டை காத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது என்கிற நோக்கம்தான் இந்துத்துவ கும்பலுக்கு இருக்கிறது.
ம. வெங்கடேசன் எழுதிய இந்துத்துவ அம்பேத்கர்(கிழக்கு வெளியீடு) நூலுக்கு மறுப்பாக எழுதியது.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 2

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை.
அம்பேத்கர் - இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை.
அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் - பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் -  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாட ம.வெங்கடேசன் என்ற ஒரு தலித் இளைஞரைப் பிடித்து, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்ற ஒரு நூலை எழுத வைத்திருக்கிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லோரும் பங்கேற் றிருக்கிறார்கள்.  இப்போது அம்பேத்கர் இவர்களுக்கு  தேவைப்படுகிறார். வெளிப்படையாகச் சொன்னால் தலித் வாக்கு வங்கிக்கு வலை வீசக் கிளம்பியிருக்கிறார்கள்.
இந்த நூல் வரலாற்று அபத்தமாகவே வெளி வந்திருக்கிறது. இதில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் தான் என்ன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
“இந்து என்பதில் பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோர்களை அம்பேத்கரே உள்ளடக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் இந்துவாகவே இருந்திருக்கிறார். ..... அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்குப் பெயரே ‘இந்து சட்டத் திருத்த மசோதா தான்’.” - எனவே அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளர் - இப்படி ஒரு வாதம்!
முதன்முதலாக ‘இந்து’ என்ற பெயரைத் தந்து ‘இந்து’ சட்டங்களை உருவாக்கியவர்கள் யார்? பிரிட்டிஷ்காரர்கள் தான்.
இந்தியாவுக்கு படை எடுத்து வந்த இஸ்லாமியர்கள், சிந்து நதிக்கு அப்பால்  இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு ‘அல்-ஹிந்த்’ என்று பெயரிட்டனர். இது வாழும் இடத்தைக் குறித்த சொல்! இதிலிருந்துதான் ‘இந்து’ என்ற சொல்லை பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக் கொண்டனர்.  அப்போது இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதார் என்ற இரண்டு அடையாளங்கள் மட்டுமே சமூகத்தில் இருந்தன. முஸ்லிம் அல்லாத மக்களுக்கு சட்டங்களை உருவாக்க பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியபோது, பார்ப்பனர்கள் அதற்கு  அடிப்படை ‘சித்தாந்தமாக’ மனு சாஸ்திரத்தை வழங்கினர். சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியாவில் இயங்கிய பிரிட்டிஷ் நீதிமன்றத்திலும், லண்டனில் இயங்கிய உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சிலிலும்’ தீர்ப்புகள் மனு சாஸ்திர அடிப்படையில்தான் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொதுவான கிரிமினல் சட்டத்தை மெக்காலே கொண்டுவரும் வரை இதுதான் நிலை. ஆக, ‘இந்து’ என்ற பெயரை தந்தது பிரிட்டிஷ்காரன்; அம்பேத்கர் அல்ல. இதற்கு இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரியே சாட்சி.
சங்கராச்சாரி கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது. 
“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிர வாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன்  நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.” (நூல்: தெய்வத் தின் குரல் - பாகம் 1 - பக்.266)
ஏதோ அம்பேத்கர்தான், ‘இந்து’ என்ற பெயரை ‘இந்துத்துவா’ உணர்வோடு கொடுத்ததாக எழுதுவது வரலாற்று மோசடி. பல்வேறு மதக் குழுக்களை தனக்குள் இழுத்துக் கொண்டதே ‘இந்து’ மதம்.
அரசியல் நிர்ணய சபையில் ‘இந்து’ சட்டம் குறித்த விவாதங்கள் வந்தபோது, இஸ்லாமிய கிறிஸ்துவ மத சட்டங்களைப்போல் அதற்கு ஒற்றை வடிவம் தர முடிய வில்லை. எனவே தான், எது கிறிஸ்துவ மதம் இல்லையோ எது முஸ்லிம் மதம் இல்லையோ எது யூத மதம் இல்லையோ அதுதான் ‘இந்துமதம்’ என்றுதான் சட்ட வரையறை வழங்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபையிலேயே அம்பேத்கர், அதில் அடங்கியுள்ள ஒவ்வொரு தனித் தனிக் குழுக்களுக்குமான நடைமுறைகளை மாற்றி அனைத்து ‘இந்து’க்களுக்கும் பொதுவான ‘சிவில்’ சட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். ‘பார்ப்பன சனாதன வர்ணாஸ்ரம’ மேலாதிக்கத்தில் இருந்த இந்து மதத்துக்குள் குறைந்த பட்சம் அதிலுள்ள பார்ப்பன மேலாண்மையை அகற்றி, அனைவரையும் முயன்றவரை சமப்படுத்தலாம் என்பதற் காகவே அம்பேத்கர் இந்த முயற்சியில் இறங்கினாரே தவிர, ‘இந்துத்துவா’வை ஆதரித்து அல்ல. ஆனால், ‘இந்து ராஷ்டிர’க் கூட்டம் இந்த முயற்சியையையும் முறியடித்தது. மீண்டும் நேருவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சரான போது இந்து பார்ப்பனிய மதம் திணித்த சமூகக் கேடுகளை அகற்றுவதற்கு 1952இல் இந்து சீர் திருத்தச் சட்டத்துக்கான மசோதாவை கொண்டு வந்தார்.
ஏற்கனவே அமுலில் இருந்த ‘இந்து’ சட்டத்தில் ‘பலதார மணம்’ அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ஒழித்து, வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணம் செய்யும் உரிமை; பெண் குழந்தைகளையும் வாரிசாக தத்தெடுக்கலாம் என்ற உரிமை; விதவைகளுக்கும் குடும்ப சொத்தில் உரிமை என்ற அம்சங்களை உள்ளடக்கியதுதான் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட திருத்தம். இந்த மாற்றங்களை ‘இந்து’ சமூகத்தில் ஏற்கவே முடியாது என்று நாடாளுமன்றத்தில் இந்து மகாசபை தலைவர்களான என்.சி. சட்டர்ஜி, எஸ்.பி. முகர்ஜி உள்ளிட்ட மதவெறி பார்ப்பன சக்திகள் பலரும் எதிர்த்தனர். பழமையில் ஊறிப்போன அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். உடனே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். இதுதான் வரலாறு. சரி; அவர்கள் வாதப்படியே கேட்போம். அப்படி அம்பேத்கர் கொண்டு வந்த ‘இந்து’ சட்டதிருத்தம், ‘இந்து’த்துவத் துக்கான ஆதரவின் அடையாளம் என்றால், அதை, ஏன் ‘சங்பரிவார்’களும் - இந்து மகாசபைக்காரர்களும் எதிர்த் தார்கள்? இந்த சீர்திருத்த மசோதாவை எதிர்ப்பதற்காகவே 15,000 பேர் கொண்ட ‘இராமராஜ்ய பரிஷத்’ என்ற ஒரு படையை உருவாக்கினார்கள். நாடாளுமன்றத்தின் முன்பும் டெல்லியிலும் அம்பேத்கர் உருவ படத்தை எரித்து போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் மட்டும் 70 இடங்களில் அம்பேத்கர் படங்கள் எரிக்கப்பட்டன.
இவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த வாதம் -
“அம்பேத்கரின் கடுமையான விமர்சனங்கள் இந்து மதத்தை அழிக்க நினைப்பது அல்ல; சீர்திருத்த நினைப்பது தான். இதை அண்ணல் அம்பேத்கரே தெளிவாக ‘சாதி ஒழிப்பு’ நூலில் கூறியுள்ளார்.”  இது உண்மையல்ல. அம்பேத்கர் இந்துமத ஒழிப்பைத் தான் பேசினார்.
அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்து மதம் - ஒரு மதமே அல்ல என்பதே அவரது உறுதியான கருத்து. அது ஜாதிகளின் பட்டியல் என்றார். ‘இந்துத்துவா’ எழுத்தாளர் குறிப்பிடும் ‘ஜாதி ஒழிப்பு’ நூலிலிருந்தே ஆதாரத்தை எடுத்துக் காட்டுவோம்.
“இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்திய உள்நாட்டினரை யும் பிரித்துக் காட்டுவதற்காக முகம்மதியர்கள் இந்திய உள்நாட்டினரை ‘இந்து’க்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்புள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே காணப்படவில்லை. அக்காலத்தில் இந்தியர்கள் தங்களை தனிச் சமூகமாகவே கருதவோ, மதிக்கவோ இல்லை என்பதால், இந்தியர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு சமூகப் பெயரை உண்டாக்க அவர்களுக்குத் தேவையுண்டாகவில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என்று ஒரு சமூகமே இல்லை. இந்துச் சமூகம் என்பது பல ஜாதிகளைச் சார்ந்த ஒரு கதம்பம்.” இதுதான் அம்பேத்கரின் உறுதியான கருத்து. (நூல்: ஜாதியை ஒழிக்க வழி)
இந்து சமூகம் என்றே கிடையாது என்று அறிவித்த தலைவரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக படம் காட்டு கிறார்கள். அவர் இந்துமதத்தை சீர்திருத்தவில்லை; அழிக்கவே விரும்பினார் என்பதற்கு இதோ மற்றொரு சான்று.
1935ஆம் ஆண்டு லாகூரில், ஜாதி ஒழிப்புச் சங்கம் ஒன்று மாநாட்டுக்கு தலைமை உரை வழங்க அம்பேத்கரை அழைத்திருந்தது. ‘ஜாட்-பட்-தோடக் மண்டலம்’ என்ற அந்த அமைப்புக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்பேத்கர் தனது உரையை முன்கூட்டியே அனுப்பியிருந் தார். உரையைப் படித்த மாநாட்டு நிர்வாகிகள் உரையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அம்பேத்கர் அதற்கு ஒப்பவில்லை; எனவே மாநாடு நிறுத்தப்பட்டது. அம்பேத்கரின் அந்த ஆங்கில உரையை தமிழ்நாட்டில் பெரியார் அம்பேத்கரிடமிருந்து பெற்று 1936இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் சார்பில் தமிழில் வெளி யிட்டார். அந்த உரையுடன் அம்பேத்கருக்கும் அம்பேத்கரை அழைத்திருந்த ஜாதி ஒழிப்பு சங்கத்தினருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களையும் அம்பேத்கர் இணைத்திருந்தார். அதில் அம்பேத்கர் உரையில் நீக்கப்பட வேண்டிய பகுதியாக ஜாதி ஒழிப்பு சங்கத்தினர் குறிப்பிட்டதும் இடம் பெற்றிருக்கிறது.
“தங்கள் உரையில் - பார்ப்பனியம் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதி வரை சேர்த்திருக்கலாம். இந்துமதம் ஒழிய வேண்டும் என்றும், வேதங்கள் ஆபாசமானவை என்றும், தாங்கள் இந்து மதத்தை விட்டு நீங்கப் போவதாகவும் கடைசியில் சேர்த்திருக்கும் பகுதி - சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக இல்லை”.
ஜாதி ஒழிப்பு சங்கத்தினரின் வேண்டுகோளை மறுத்து அம்பேத்கர் அளித்த பதில் இது:
“இந்து மதம் ஒழிய வேண்டும் என்ற கூறுவதால் தங்கள் அமைப்பு அப்படியே கவிழ்ந்து போய் விடும் என்று நான் கருத வில்லை. வார்த்தைகளுக்குப் பயப்படுபவர்கள் மூடர்கள் என்பதுதான் எனது கருத்து..... மதம் ஒழிய வேண்டும் என்பதற்கு நான் கூறும் சமாதானங்களைக் கவனியாமல், மதம் ஒழிய வேண்டும் என்ற வார்த்தைகளைப் பார்த்த வுடனேயே பீதி அடையும். உங்கள் அமைப்பு மீது எனது மதிப்பு குறைந்து விட்டது.”
- இது அம்பேத்கர் தந்த பதில்! இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அம்பேத்கரின் உறுதியான கருத்து என்பதற்கு இதுவே தெளிவான சான்று. அந்த ஒரு வார்த்தையை தனது உரையிலிருந்து நீக்க விரும்புவதை அம்பேத்கர் ஏற்காததோடு மாநாட்டையே புறக்கணித்தார்.
அத்தகைய தலைவரை - “மத ஒழிப்பாளர் அல்ல; மதத்தை சீர்திருத்தத்தை விரும்பியவர்” என்று எழுது கிறார்கள். இவர்களுக்கு அம்பேத்கர் மொழியிலேயே பதில் கூற வேண்டுமானால் - “வார்த்தைகளுக்கே அஞ்சும் மூடர்கள்!” என்றுதான் கூறவேண்டும்.
“அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பு’ என்றுதான் நூல் எழுதி யிருக்கிறாரே தவிர ‘இந்து மத ஒழிப்பு’ என்று நூல் எழுதினாரா?” - இப்படி ஒரு அபத்தமான கேள்வியை எழுப்புகிறார்கள். இந்து மதமே ஜாதிகளின் தொகுப்பு என்பதைத் தவிர அது ஒரு மதமோ சமூகமோ அல்ல என்று அம்பேத்கர் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு, ‘இந்து மத ஒழிப்பு’ என்று தனியாக ஒரு நூல் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? இந்து மதத்தின் உயிர்நாடி யான ஜாதி - பார்ப்பனியம் - வர்ணாஸ்ரமத்தை ஒழித்து, அதன் அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று அவர் கூறியதே இந்துமத ஒழிப்பு தானே? இதைவிட்டால் இந்து மதத்தில் வேறு என்ன இருக்கிறது?
அம்பேத்கர் ஜாதி எதிர்ப்பை மட்டுமல்ல; பார்ப் பனர்களை எதிர்க்கிறார்; பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்; புரோகித வர்க்கத்தை எதிர்க்கிறார்; வேதங்களை எதிர்க் கிறார்; மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்; கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்று கூறியிருக் கிறார்; வேத-சாஸ்திரங்களுக்கு உள்ள அதிகாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். கடைசியில் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு புத்த மார்க்கத்தில் இலட்சக்கணக்கான மக்களுடன் இணைந்தபோது எடுத்த உறுதிமொழியில், இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து கடவுள்களை வணங்க மாட்டோம்; வீட்டில் நிகழ்ச்சிகளுக்கு புரோகிதர்களை அழைக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வைக்கிறார். இந்து பார்ப்பன மதத்துக்குள் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது என்ற உறுதியான முடிவுக்குப் பிறகு தான் புத்த மார்க்கத்தையே தழுவுகிறார். இவ்வளவுக்குப் பிறகும் அம்பேத்கர் ‘இந்துத்துவவாதி’ என்றும் ‘இந்து’ சீர்திருத்தவாதி என்றும் கூப்பாடு போடுகிறார்கள்; நூல் எழுதுகிறார்கள்.

சனி, 8 ஏப்ரல், 2017

சுயராஜ்யமா? சுயமரியாதையா?


பிறப்புரிமை
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
தந்தை பெரியார்
நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமைச் செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம்.
இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமை யையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.
நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டா லும் வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமேயென்கிற பயத்தால் அதற்கு வேண்டிய முட்டுக் கட்டைகளைப் போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில் ராஜீயவாதிக ளென்னும் பேரால் வாழ்ந்து வருகின்றார்கள்.
நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப் பற்றி ஒரு வார்த்தை யாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் சுமார் ஐந்து வருடங்க ளுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும் போது, என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால், நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை யென்று சொல்லியிருக்கிறார்.
மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளுவதுதான் பிறப்புரிமையேயல்லாமல், அரசியலான ராஜீயமென்னும் சுயராஜ்யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது.
ராஜீய பாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும், விளக்கு போடுவதும், காவல் காப்பதும் எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொது நன்மைக்கும் எப்படி பல தொழில்கள் இருக்கின்ற னவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத் தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத் தான் உரிமை என்றாவது கடவுள் யாருக்கும் பிரித்துக் கொடுக்கவே இல்லை.
மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள்தான். ஆதலால், இவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடைய வேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும் பரோபகார மென்பதுமேதான்.
சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும் கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதை அற்றவனைப் பிணமென்று தான் சொல்லவேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது நமது தேசத்தில் சுயமரியாதை அற்று பூச்சி புழுக்கள் போலும், நாய்கள் பன்றிகள் போலும், பிசாசுகள் அரக்கர்கள் போலும் வாழும் ஜனங்கள் கோடிக் கணக்காய் இருக்கின்றனர். லக்ஷக்கணக்காய் தினம் பிறக்கின்றனர். இச்சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு?
உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத் தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதையுள்ள வனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால் தான் அவர்களுக்கு கவலையென்ன?
இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரி யாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்ய மடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாத படியும் வைத்து இருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா?
அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவேயில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால், இந்த சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக் கூட நமக்குச் சௌகரியம் கிடைத்திருக்காது.
நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமா யிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலேயல்லாமல், அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும்பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை, அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக்கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை.
ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒரு நாளும் இவ்வித சுயமரியாதைக் கேடுக்கு அநுகூலமாய் இருப்பதில்லை.
ஒரு தேசம் சுதந்திர மடைய வேண்டும் என்ற உண்மையான கவலை இருக்குமானால், அக் கவலைக்கு அவர்கள் அருகர்களா? இல்லையா வென்பதை பரீக்ஷிக்க வேண்டுமானால், அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும்.
அஃதில்லாமல் சுதந்திரத்திற்காக செய்யப்படும் எவ்வித முயற்சிகளும் தனிப் பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலத்திற்கும், சுயமரியாதை இல்லாத நிலைமையை பலப்படுத்தவும்தான் ஆகுமேயல்லாமல் வேறொன் றுக்கும் உதவாது.
அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும், சுதந்திரம் பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங் களாகப் போட்டு விட்டார். தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லு வதும் கதர் அணிய வேண்டும் என்று சொல்லுவதும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதை யின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத் தைக் கண்டு தரிசிக்கவும் முடியாமற்படி வைத்திருக்கிற வரையில் சுயமரி யாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்கு சுதந்திரமென்பது ஒரு மனிதன் தன் உடலிற் போதிய சக்தியிருந்தாலும், ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதானால், அவன் எவ்விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத்திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார்.
மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதினா லேயே வாழ முடியும் என்கிற நிலைமை யடைந்து நமது நாட்டில் உள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ளத் தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.
இந்நிலைமையில் சுதந்திரம் சுயராஜ்யம் உரிமை என்கிற வார்த் தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும் கொடுமைக்கும் ஆதாரமானதுதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடைய பாடுபட வேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடு பட வேண்டும்.
குடி அரசு - தலையங்கம் - 24.01.1926

வியாழன், 6 ஏப்ரல், 2017

அம்பேத்கர் பெரியார்


தமிழில் அம்பேத்கர்என்பது குறித்துப்  பேசுகையில்அண்ணல் அம்பேத்கரையும்அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான "ரிவோல்ட்', "குடி அரசுஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள்எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் – அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால்அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.

அம்பேத்கர்
ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் – பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம்ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடுஎன்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின்
பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்துபெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோஇருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929).
பின்னர் புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் வெளிவந்தது. ("ரிவோல்ட்', 10.11.1929). அம்பேத்கரின் அரசியல்சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற சொற் போர்கள்தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணா நோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள்அம்பேத்கர் – ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி. ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள்காந்தியின் "ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்த கொண்டிருந்த 1936 – 1937 ஆம் ஆண்டுகளில்தான்லாகூரிலிருந்த ஜாத் – பட் – தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், "தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைஎனச் சொல்லப்படுவதுமான 'அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞுஎன்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு "குடி அரசுஇதழில் "ஜாதியை ஒழிக்க வழிஎன்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர்அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இது குறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் "பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்கலந்து கொண்டபோது "குடி அரசுஎழுதிய தலையங்கம்சில சுவையான தகவல்களைக் கூறுகிறது :
“1920களின் இறுதியில் மேற்சொன்ன "ஜாத் – பட் – தோடக் மண்டலின்துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்
தெடுக்கப்பட்டிருக்கிறார்பெரியார் இந்து மத விரோதிநாத்திகர்முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில்பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1936 இல் அந்த அமைப்பின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால்அந்த மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை. "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில்அதைத் தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழிஎன்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0 – 4 – 0 வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாதுசுயராஜ்ஜியமும் வராதுபொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்'' ("குடி அரசுதலையங்கம், 13.1.1945).
மேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துக்களை காந்தி விமர்சித்ததையும்காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும்அந்த பதில்களிலும் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வர்ண தர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்த போதிலும்இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே பரிந்துரைக்கப்பட்ட மகத்தான ஆக்கம் "சாதி ஒழிப்புநூல்தான்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும்பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ள காங்கிரசார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940 இல் பம்பாயில் அம்பேத்கர்ஜின்னாபெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரசாரின் சூழ்ச்சிகளையும் விமர்சித்துஅவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் "குடி அரசுஇதழில் காணப்படுகிறது ("குடி அரசு', 28.1.1940). ஆனால்அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும்அந்த சந்திப்பு குறித்து "தி பாம்பே குரோனிக்கிள்என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்திமகராட்டிரா அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட sorce material on dr.babasaheb ambedkar and the movement of untouchables என்ற நூலில் காணப்படுகிறது (பக்கம் 210). 1940 சனவரி 8 அன்று மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின் 208 – 210 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.
வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர்அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, "திராவிட நாட்டில்', மகாராட்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் "குடி அரசுதலையங்கம் ஒன்று குறிப்பிடுகிறது "குடி அரசு', (30.4.1944) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோமராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை.
சுயமரியாதை ஏடுகள்எப்போதுமே காங்கிரஸ் இந்து – தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும்அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. ஓர் எடுத்துக்காட்டு :
தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளலாகதென்றும்இவ்வளவு வேற்றுமைகளை இந்நாட்டிலேயுண்டு பண்ணிஇந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள்இதிகாசங்கள்புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி வருகிறார். ஆனால்தென்னாட்டில் நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில தோழர்கள் – முனிசாமி பிள்ளைசிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரச்சாரங்களை "ஹரிஜனங்கள் (தாழ்த்தப்பட்டோர்)கவனிக்கக்கூடாதுஇந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்க வேண்டும்'' என்றும் "அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லைஎன்றும் கூறிவருகிறார்கள். இவர்கள்நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால்இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோஎதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா?'' ("குடி அரசு', 6.1.1945)

பெரியார்
1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும்விசயங்கள் தொடர்பானவை 1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது. 2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது. 3. காஷ்மீர் விவகாரம் 4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது. 4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து "விடுதலை'யில் சா. குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால்அவற்றை மட்டும் கொண்டு சா. குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பை தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின்ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் – "அம்பேத்கர் யார்என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சா. குருசாமி கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும் கூடஅவர் மீது பெரியார் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக 1947 சூலையில் மாயவரத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம் :

தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள்கடையர்கள்இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். ஏன்என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால், “பஞ்சமர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்மம்) மதத்தை சார வேண்டும்'' என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930 இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் ராமாயணத்தைக் கொளுத்தியவர். “கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்'' என்று கூடஅதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர். “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. இனியும் இருக்காது. இந்து மதத்தை விட்டொழித்தாலொழிய இழிவு நீங்காது'' என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம் செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால்அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்
மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது ("விடுதலை' 10.7.1947).
அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்றுஅவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது கூடஅவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன்இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்த வந்தன. எடுத்துக்காட்டாகபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை "இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்துபெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, "பிற்படுத்தப்பட்டோர்என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர். 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை "விடுதலைஏடு பதிவு செய்துள்ளது.
அம்பேத்கரின் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?' "இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள்பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது :
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால்டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானதுஎந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும்பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

அம்பெத்கர் உடன் பெரியார்
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரைவெகு சாதாரணமாக மதித்ததோடுஅவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய – ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்ஆபாசமாகவும்அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்காந்தியாரையே ஒரு பத்தாம்பசலிபிற்போக்குவாதி என்றும்அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்என்றும் சொன்னதோடுகாந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும்ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லிபல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்து மதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப் பிரிவும்அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும்சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியதானது – இந்தியாவுக்கும்தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்'' ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்)பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1934).
அம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள்ஒத்த கருத்துக்கள்அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம் தந்து வந்த மதிப்புகருத்து வேறுபாடுகள்இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய விஷயங்களாகும். இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோதுபேபியன் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான பொருளாதார அறிஞர் சிட்னி வெப்அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் பேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த பேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம்பெண்ணியம்சோவியத் ரஷ்யா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள்
பெரியாரின் "குடி அரசுஇதழில் வெளியாகியுள்ளன. அரசு எந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது பேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து.
மேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன்எல்.டி. ஹாப்வுஸ் ஆகியோரிடமிருந்துதான் ("பிரிட்டிஷ் கருத்து முதல்வாதச் சிந்தனைப் பள்ளிஎனச் சொல்லப்பட்ட சிந்தனைப் போக்கின் முக்கியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.
II
"தமிழில் அம்பேத்கர்என்றுஅம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்கச் செயல்வீரர்கள்அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமி பறையர்அன்பு பொன்னோவியம் என்பதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும். அதேபோல "எரிமலைரத்தினம், "எக்ஸ்ரேமாணிக்கம்பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். "புத்தரும் அவர் தம்மமும்நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், "எக்ஸ்ரேமாணிக்கம், "எரிமலைரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும் தொகையை ஏற்றுக் கொண்ட ஒய்.எம். முத்துதிருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்திற்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' என்ற நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். கடந்த 13 ஆண்டுகளாக "தலித் முரசுதொடர்ந்து அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையேபெரியாரையும் அவரது இயக்கத்தையும் "தலித்தியகண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்றுபெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றிஇந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் – பிறப்பால் தலித்துகளோதலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் அயோத்தி தாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவபின் நவீனத்துவதலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், "சாதி ஒழிப்புநூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும் கூடதமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோதலித் அரசியல் கட்சியையோ சாராத "தலித் முரசுஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் "புனே ஒப்பந்தம்தொடர்பாகவும் அம்பேத்கரின் பவுத்த மத மாற்றம் தொடர்பாகவும்இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்டநடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட "சாதி ஒழிப்புகுறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத "தலித் எழுச்சிதமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால்தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கரின் எழுத்துகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளனஅவர்களால் செய்யத் தவறியவை ஒரு புறமிருக்கட்டும். என்.சி.பி.எச். நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டுஅம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை தலித் இயக்கங்கள் நடத்தியிருக்கின்றன?
இவை போகட்டும்கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் "டப்பிங்செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதாஇந்திய மொழிகள் அனைத்திலும் அதனை "டப்பிங்செய்து வெளியிட
மத்திய அரசாங்கமோமாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள்பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான்மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டாஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்புசெய்ததாக,
செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்அறிவுஜீவிகளுக்கோஇயக்கங்களுக்கோ இல்லை.
III
அம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோமேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராட்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான். அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத் தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் – அம்பேத்கர் இயக்கத்தோடுஅவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள். இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவதுஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால்இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.
அம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது. அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவேஇந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத் தீரத்தான் அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது. எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது அந்த மாபெரும் அறிஞரின்போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும்அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் தவிரமற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. ஒவ்வொரு எழுத்தும் பேச்சும்குறிப்பிட்ட அரசியல்சமூகச் சூழலில் குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவேஎந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார்பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் ஆங்கிலத் தொகுப்புகள் அம்பேத்கரின் எழுத்து களை சம்பந்தப்பட்ட வரலாற்றுஅரசியல்சமூகச் சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை. இந்தக் குறைபாடுகளை தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புகுரியதல்ல.
அம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனைஅவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் – வரலாறுபொருளாதாரம்மானுடவியல்அரசியல்சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்விஅவரது சிந்தனையின் பன்முகத் தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது.
ஆராய்ச்சி அறிஞராககல்லூரிப் பேராசிரியராககல்வியாளராகவழக்குரைஞராகபரோடா சமஸ்தான ராணுவத்தின் லெப்டினண்டாகவைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராகசுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராகபிரசுரங்களை வெளியிடுபவராகபத்திரிகையாளராககிளர்ச்சியாளராகபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராகஅரசியல் சட்டத்தை வரைபவராகபுத்தரின் சீடராகதாழ்த்தப்பட்டசுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர் தன் – வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் போலவே அந்த தன்வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய எழுத்து பலவற்றில் அவரது தன் – வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
அவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய – சாதிய ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில்அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து. அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும் இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில்இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும் அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே "தீண்டாமைஎன்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான்அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டதீண்டத்தகாத மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றிபிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார்.
சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோஅதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. "வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமைஎன்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே "தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதிஎன்னும் கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கினர்.
அம்பேத்கர் தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தி தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, "இந்தியாவில் சாதிகள் : அவை செயல்படும் விதமும்தோற்றமும் வளர்ச்சியும்' (இச்ண்tஞு டிண ஐணஞீடிச் : கூடஞுடிணூ Mஞுஞிடச்ணடிண்ட்எஞுணஞுண்டிண் ச்ணஞீ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt) என்னும் ஆய்வுக் கட்டுரையை "சாதி ஒழிப்புநூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரைஅவரது விருப்பம் நிறைவேறியது. ஆனால் தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோதிருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவர் எழுதி முடிக்காத வரைவுகள் ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும்அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும்இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.
அம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாகபட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள்அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் "வேலை செய்யும் உரிமைசேர்க்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு அவையில் போராடினார். ஆனால்அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே போலபொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது, “அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல. மாறாகநேருபட்டேல்பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் விளைவு'' என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார்.
வரலாற்றுபண்பாட்டுமானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் "சூத்திரரர்கள் யார்'? போன்ற நூல்களும் கூட மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்டதீண்டத்தகாத சூத்திரர்கள்தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்துஅவர்களுக்கிடையே பரந்தநேச அணியை உருவாக்குவதுதான் அந்த அரசியல் குறிக்கோள்.
இந்தியாவில் நிலவும் சுரண்டல்வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும்சுரண்டலும் வறுமையும் ஏற்றத் தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்சிய விளக்கமான "பொருளாதாரம் என்பது அடித்தளம்அரசியல்பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்குஎன்னும் வழக்கமான மார்க்சிய விளக்கத்தைத் தலைகீழாகப் புரட்டினார் :
ஆனால்அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மதசமூகஅரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோகட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால்அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோலசமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால்இருக்கும் சமூகஅரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும். (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை : Gail Omvedt, Undoing the Bondage : Dr. Ambedkar's Theory of Dalit Liberation in K.C. Yadav (Ed.). From Periphery to Centre Stage : Ambedkar, Ambedkarism & Dalit Future, Manohar, Delhi, 2000, p.117
அம்பேத்கர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவேகம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியாசீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுக்கிடையே பாராட்டினார் : “ரஷிய புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்'' எனக் கூறிய அவர்சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும்இவை மூன்றையும் வழங்கக்கூடியது பவுத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol.3(1987), P.462)
இந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும் அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோஅந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். "புத்தராகாரல் மார்க்ஸாஎன்னும் சொற்பொழிவில் மட்டுமின்றிஅவர் தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த "புத்தரும் அவர் தம்மமும்என்னும் நூலிலும் கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பவுத்தம்அறிவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலித்தைப் பரிந்துரைக்கிறது. அதுபத்தொன்பதாம்இருபதாம் நூற்றாண்டுகளில் பவுத்தத்தைப் புதுப்பிக்க இந்தியாஇலங்கைஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. “தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல''; "தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல'' என "புத்தரும் அவர் தம்மமும்நூலில் அம்பேத்கர் கூறுகிறார்.
இந்தக் கூற்றுகளின் அடிப்படையில்அம்பேத்கர்பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதில் கொள்ளவும்தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும்பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாகமத மாற்றம் என்னும் விஷயம். 1935 – 36 ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கியக் காரணங்களிலொன்றுகிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும்.
தலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கனவே இருக்கின்றஇந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால்அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறியபோதுஅவர்கள் ஏற்றுக் கொண்ட மதம்அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பவுத்தமேயன்றிஏற்கனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களிடையேஇந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பவுத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், "புத்தரும் அவர் தம்மமும்நூலில் அவர் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடுஇந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக் கொணரவோகிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூல காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும்பார்ப்பனியக் கருத்து நிலையை ஏற்றுக் கொண்ட சூத்திரர்கள் துணைக்காரணமே என்றும்பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதாரஅரசியல்பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால்பணக்கார விவசாயிகளால்வர்த்தகர்களால்பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வன்னியர் சங்கம்தேவர் பேரவைகொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம்நாடார் சங்கம் முதலியவை அனைத்துஅரசியல் அதிகாரமோபொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால்அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலித்துகள் மீது மட்டுமின்றிஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றன (கொடியங்குளம்).
ஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும்கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணி திரள்வதன் மூலமும்நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும்வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகளைத் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமேஅதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்துகிறித்துவமுஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் "பிறத்தியாராக', "அந்நியராக', "மற்றவராகபார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் "வன்முறை', வன்முறை நாடாமை என்னும் அறிவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூடஅம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும். 
சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைஅம்பேத்கர் பொருளாதார ஆய்வு மய்யம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 27.11.2009 அன்று நடத்திய "அறிஞர் அம்பேத்கர் சிந்தனைகள்கருத்தரங்கில், "தமிழில் அம்பேத்கர்என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரை ஆற்றிய உரையின் சுருக்கமே இக்கட்டுரை.
-எஸ்.வி. ராஜதுரை