புதன், 24 பிப்ரவரி, 2016

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?



தெலுங்கானா மாநிலத்தில் உலக நன்மைக்காக யாகம் நடத்தினார்கள். இந்தியா முழுவதிலுமிருந்து யாகம் வேள்வி செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற 2000 புரோகிதர்கள் கலந்து கொண்டார்களாம். அவர்களுக்க தட்சணை மட்டும் 2 கோடியாம். பந்தல் அமைக்க 3 கோடி. இடத்தைச் செப்பனிட 7 கோடியாம். இப்படி 20 கோடி ரூபாய் செலவழித்து 4 நாட்கள் யாகம் நடந்துள்ளது.

இந்த யாகத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுனர்கள் என்று பல பெரிய மனிதர்களும் கலந்து கொண்டார்கள். யாக குண்டத்தில் பருப்பும் நெய்யும் விலை உயர்ந்த பட்டாடைகளும் போட்டு எரிக்கப்பட்டன. தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் யாகத்தில் கலந்துகொள்ள வந்தபோது பார்ப்பனர்கள் அவரை வரவேற்க தீவிரமாக யாகம் செய்வதுபோல் நடிக்க ஆரம்பித்தனர். வழக்கத்தைவிட அதிகமான நெய்யையும் பருப்பையும் கட்டைகளையும் போட்டு எரிக்க ஆரம்பித்தனர். அதனால் ஆங்காங்கே நெருப்புப் பொறிகள் பறந்து வைக்கோலால் வேயப்பட்ட யாகமேடை தீப்பிடித்து யாகப் பந்தலிலும் தீ பற்றிக் கொண்டது.

யாகம் செய்துகொண்டிருந்த பார்ப்பனர்களும் அதில் கலந்துகொண்ட பக்தர்களும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள்தான் போராடி கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எந்தப் பார்ப்பானும் தீயை அணைக்க யாகம் நடத்தவில்லை. ஒரு சொம்பு தண்ணீர்கூட எடுத்து ஊற்றவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாகம், வேள்வி என்ற பெயரால் மன்னர்களையும் மக்களையும் நம்ப வைத்து அந்த யாகத் தீயில் ஆடு, மாடு, குதிரை, பருப்பு, நெய், பட்டாடைகள் என்று போட்டு எரித்து பொருட்களை நாசம் செய்துவந்தனர் பார்ப்பனர்கள். இந்த யாகம், வேள்வி ஆகியவற்றை எதிர்த்து இயக்கம் கண்டவர்தான் புத்தர்பிரான்.
அதற்குப் பிறகும் இந்தப் பார்ப்பனர்கள் திருந்தியபாடில்லை. மன்னர்களும் புத்தி பெறவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு சோமநாதபுரப் படையெடுப்பு. சோமநாதபுரம் மன்னர் மிகுந்த பலசாலி. அவனிடம் மிகத் திறமையான படைவீரர்கள் இருந்தனர். காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என மிகவும் தேர்ச்சிபெற்ற படைகள் இருந்தன. அதனால்தான் அங்கே படையெடுத்து வந்த கஜினி முகமது 17 முறை படையெடுத்து வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் 18வது முறையாகப் படையெடுத்து வந்தபோது மன்னன் அவனை முறியடிக்க படையெடுக்க ஆயத்தமான போது பார்ப்பனர்கள் அவனிடம் சென்று ~நீங்கள் படையெடுத்துச் செல்ல வேண்டாம் மன்னா, நாங்கள் யாகம் நடத்துகிறோம். அந்த யாகத்திலிருந்து கிளம்பிவரும் பூதம் கஜினிமுகமதுவை விரட்டியடித்து விடும்| என்று ஏமாற்றி பல கோடி பொன்; செலவில் யாகம் நடத்தினர். படைவீரர்கள் படுத்துத் தூங்கினர். போர்க்கருவிகள் கூடத்திலேயே முடங்கின. அதனால் மிகவும் சுலபமாக கஜினி முகமது சோமநாதபுரத்தின்மீது படையெடுத்து வந்து அங்கே டன் கணக்கில் குவிக்கப்பட்டுக்கிடந்த பொன்னையும் பொருளையும் அள்ளிச் சென்றான்.

அதேபோல 1924ல் தந்தை பெரியார் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்க இருந்த தடையை எதிர்த்துப் போராடியபோது, பார்ப்பனர்கள்  திருவாங்கூர் மன்னரை ஏமாற்றி பெரியாரை ஒழித்துக்கட்ட சத்துரு சங்கார யாகம் என்ற ஒன்றை நடத்தினர். கடைசியில் பெரியார் சாகவில்லை. அதன்பிறகும் 50ஆண்டு காலம் உயிரோடுதான் இருந்தார். ஆனால் அந்த யாகம் நடத்த உதவிய மன்னர்தான் யாகம் நடந்து கொண்டிருக்கும்போதே இறந்துபோனார்
.
இவ்வளவு நடந்த பிறகும் பார்ப்பனர்களும் திருந்தவில்லை. ஆட்சியாளர்களும் திருந்தவில்லை. எம்ஜியார் ஆட்சியின்போது தஞ்சைப் பெரிய கோயிலில் பெரிய அளவில் யாகம் நடத்தப்பட்டது. அப்பொழுதும் யாகப்பந்தல் தீப்பிடித்து எரிந்து நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் இறந்துபோனார்கள். எந்தப் பார்ப்பானுக்கும் ஒரு சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும் மழை வேண்டி வருண ஜெபம் நடத்துகிறார்கள். திருட்டு கொலை கொள்ளை அதிகம் நடக்கிறது என்று காவல்நிலையத்திலேயே யாகம் வேள்வி நடக்கிறது.

ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவனும் இருக்கத்தானே செய்வான்? அரசும் மக்களும் மூடத்தனத்தில் திளைக்கும்போது அதனை அயோக்கியன் அறுவடை செய்யத்தானே நினைப்பான்? இங்கே படித்தவனுக்கும் புத்தியில்லை. பதவியாளனுக்கும் அறிவு இல்லை. பார்ப்பானுக்கும் அறிவு நாணயமில்லை. இவர்களெல்லாம் திருந்துவது எப்போதோ அப்போதுதான் நம் நாடும் உருப்படும்.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை நீதிமன்றத்தீர்ப்பு சொல்வது என்ன?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிறார்கள் மதவாதிகள். கிறிஸ்தவன் யாராக இருந்தாலும் அந்த மத சட்டங்களைப் படித்தால் பாதிரியாராகலாம். ஒரு இஸ்லாமியன் அந்த மத விதிகளைப் பயின்றால் முல்லாவாகலாம். ஆனால் ஒரு இந்து என்று சொல்லப்படுகிறவர் மட்டும் அந்த மதத்துக்குரிய மதசடங்குகளைப் படித்து அர்ச்சகராக முடியாது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவருக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு என்று சொன்னது. அப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாமல் நீங்களெல்லாம் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால் நீங்கள் கோயிலுக்;குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். கருவறைக்குள் வந்தால் சாமி செத்துப்போகும். என்றார்கள்.


கோயில் கட்டப் பணம் தருவது அந்த சூத்திரர்கள். கொத்தனார் வேலை பார்ப்பது சூத்திரர்கள். சித்தாள் வேலை பார்ப்பது சூத்திரர்கள். சிலை வடிப்பது சூத்திரர்கள். வண்ணம் தீட்டுவது சூத்திரர்கள். இவர்களெல்லாம் கோயிலுக்குள் வந்தால் தீட்டு; சாமி செத்துப் போகும் என்கிறார்கள். ஒரு பைசா முதல் போடாதவன், இதில் எந்த வேலையும் செய்யாத பார்ப்பான் கடைசி நேரத்தில் வந்து செட்டியார்வாள் தள்ளுங்கோ, முதலியார்வாள் தள்ளுங்கோ, பிள்ளைவாள் தள்ளுங்கோ, நாயக்கர்வாள் தள்ளுங்கோ என்று அனைவரையும் தள்ளிவிட்டு பார்ப்பான் மட்டும்தான் கருவறைக்குள் நுழைய முடியுமென்றால் அது அனைத்து இந்துக்களுக்கும் அவமானமில்லையா? சுயமரியாதை உள்ளவன் இதை ஒத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடினார் பெரியார்.
1972ல் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை இயற்றினார். அப்பொழுது அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றார்கள். இதன் மூலம் ஆகம முறைகளைத் தெரியாதவர்கள் அர்ச்சகராகிவிடுவார்கள். அதனால் முறைப்படி ஆகமங்களைக் கற்றவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்று அப்பொழுது தீர்ப்பு சொன்னது நீதிமன்றம்.


2006ல் முதல்வரான கலைஞர் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் என்பவர் தலைமையில்; இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மற்றும் தவத்திரு தெய்வசிகாமணி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், போரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிறீரங்கம் சிறீங்க நாராயண ஜீயர், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் சந்திரசேகர பட்டர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் வேத ஆகமப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி அதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அனைத்து ஜாதியினரையும் தேர்ந்தெடுத்து முறைப்படி வேத ஆகமப் பயிற்சி முடித்து  207 பேர் தீட்சை பெற்று அர்ச்சகர் பணி நியமனத்துக்குத் தயாராக இருந்தார்கள்.


இவர்களை அர்ச்சகராக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று சொல்லவில்லை. வேத ஆகமப்படி பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின்படி ஏற்கனவே தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள அனைவரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்.
ஆனால் இந்து, தினமணி, தினமலர் போன்ற பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டதாக செய்தி வெளியிட்டார்கள். அது அவர்களது ஆசையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அத்தீர்ப்பில் எந்த இடத்திலும் அந்த சட்டம் செல்லாது என்றோ தமிழக அரசால் பயிற்சியளிக்கப்பட்ட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்றோ சொல்லப்படவில்லை.


அந்தத் தீர்ப்பினை முழுவதும் சரியாகப் படித்து அதன்படி அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து ஜாதியினரையும் தமிழக அரசு அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சொன்னவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்கள்தான். அவர்கள் அனைவரும் ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள்தான். எனவே, இத்தீர்ப்பின்படி அவர்கள் அனைவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். அதுதான் சமூகநீதிக்கும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் சரியானது.
எனவே, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி சமூகநீதியை நிலைநாட்டவும் காலங்காலமாக பார்ப்பனர்கள் நம் மக்கள்மீது சுமத்திவந்த சூத்திரப்பட்டத்தை ஒழித்து இழிவைத்துடைக்க அனைத்து முற்போக்கு சக்திகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.