வெள்ளி, 17 மார்ச், 2017

பகுத்தறிவின் எல்லை பொதுவுடைமைதான்


தந்தை பெரியார் ஒருபோதும் பொதுவுடைமைக்கு எதிரியல்ல. பகுத்தறிவின் எல்லை பொதுவுடைமைதான் என்றார். பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமை வேண்டும் என்றார்.
ஆனால் கம்யூனிஸ்ட்களை வழிநடத்திய தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சோஷலிச சமதர்மத்திட்டத்திலிருந்து விலகிவிட்டார் பெரியார் என்று விமர்சனம் செய்தார்கள். இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் பெரியாரை தவறான தத்துவத்தின் தந்தை என்று விம்ரசனம் செய்தார்கள். இன்று ஆர்எஸ்எஸ் காரர்கள் பேசுவதுபோல ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் ஒரு மாயை என்றார் இராமமூர்த்தி. பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தபோது ஜீவானந்தம் போன்றவர்கள் கலைநயத்திற்காக கம்பனைப் போற்ற வேண்டும் என்றார்கள். பெரியாரின் மத எதிரப்புப் பிரச்சாரத்தினை கம்யூனிஸ்ட்கள் ஆதரித்ததில்லை. வறட்டு நாத்திகம் பேசுகிறார் என்று பெரியாரைக் குறை கூறினார்கள்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் அவர்கள் ஆதரிக்கவே இல்லை.
வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷனை அமுல்படுத்தியதற்காக பிஜேபியினரால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகுதான் கம்யூனிஸ்ட்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க ஆரம்பித்தார்கள்.
அதேபோல ஆர்எஸ்எஸ் காவிக்கும்பல் பாபர் மசூதியை இடித்துவிட்டு மதவெறித்தாண்டவமாடிய பிறகுதான் அவர்களும் மதவாதத்தை எதிர்க்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கும் மதவாதிகளை எதிர்க்கிறார்களே தவிர முழுமையாக மதத்தை எதிர்க்கவில்லை. பார்ப்பனர்களைச் சேர்க்க மாட்டேன் என்று பெரியார் சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பெரியாரியலும் அம்பேத்கரியலும்தான் தீர்வு என்பதை இப்பொழுதுதான் அனைவரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நாட்டை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவ்விப் பிடித்துள்ள மதவாத இருளுக்கு பெரியாரியலும் அம்பேத்கரியலும்தான் ஒரே தீர்வு. அந்தத் திசையில் பயணிப்பதே இன்று காலத்தின்கட்டாயம்.

திங்கள், 13 மார்ச், 2017

அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தரப் பணி






பெல் நிறுவனத்திற்கு நிரந்தரப் பணிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகத்தான் நிரப்பப் பட்டு வந்தன. அய்டிஅய் படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை எழுத்துத் தேர்வு  செய்முறைத் தேர்வு , நேர்முகத் தேர்வு என தேர்வு வைத்து தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஓராண்டு அப்ரண்டிஸ் முடித்தவுடன் கிரேடு IV ஆக பணியமர்த்தப்பட்டார்கள். அப்ரண்டிசாக தேர்ந்தெடுக்கப்பட்டாலே இங்கு நிரந்தரப்பணி உறுதி. பயிற்சி முடித்து அடுத்த நாளே கிரேடு IV அளிக்கப்பட்டதும் உண்டு.

சில காலம் தினக்கூலியாக அமர்த்தப்பட்டு அதன்பிறகு பணியமர்த்தப்பட்டவர்களும் உண்டு.
அவ்வாறு 1980ல் பயிற்சிபெற்ற 27வது பேட்ச் வெல்டர்கள் 1981ல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நீங்கள் ஆர்டிசான் கிரேடு IV பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் பெயர் தே;ர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளது. காலியிடம் ஏற்படும்பொழுது உங்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது.

அவர்களுக்கு 1987ல் தினக்கூலியாக ( NMR) ஆக பணியமர்த்த நிர்வாகம் தந்தி அனுப்பியது. அந்தத் தந்தியில் நீங்கள் ஏதேனும் வேறு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தால் இத்தற்காலிகப் பணிக்காக அதை ராஜினாமா செய்ய வேண்டாம். இத்தினக் கூலிப்பணிக்கு நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் உங்கள் பெயர் தே;ர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அவர்களில் 17 பேர் 1987 லில் இருந்து 1993 வரை கிட்டத்தட்ட 900 நாட்கள் வரை விட்டுவிட்டு தினக்கூலியாக ( NMR) ஆக பணியமர்த்தம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணியில் இருந்தபோதே 1991ல் நிர்வாக இயக்குனருக்கு தங்களுக்கு கிரேடு IV வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள்.

அதற்கு ஊழியர்துறை அதிகாரி திரு கந்தசாமி அவர்கள் ~26வது பேட்ச் வெல்டர்கள் சிலர் இன்னும் பணியமர்த்தம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கம் பணி வழங்கிய பிறகு உங்களுக்கும் பணி வழங்கப்படும். உங்கள் பெயர் தேர்வானோர் பட்டியலில் பராமரிக்கப்பட்டு வருகிறது| என்று கடிதம் அனுப்பினார். 27வது பேட்சிலேயே சிலர் நிரந்தரப் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தபோது எந்த பதிலையும் நிர்வாகம் வழங்கவில்லை.
இதற்கிடையில் 1997 ல் பயிற்சி முடித்த பொருத்துனர் 17 பேர் நீதிமன்றம் சென்று நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டார்கள். அப்பொழுது இவர்கள் நிர்வாகத்தை அணுகித் தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று கேட்டபொழுது நீங்களும் இதேபோல் நீதிமன்றம் சென்று தீர்ப்புப் பெற்று வாருங்கள் உங்களுக்கு வேலை வழங்குகிறோம் என்று ஆலோனை வழங்கினர் ஊழியர்துறை அதிகாரிகள்.

இதை நம்பி அவர்களும் நீதிமன்றம் சென்றார்கள். இவர்கள் வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் முருகேசன் அவர்கள்      18-04-2001ல் இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
நிர்வாகம் அதற்கு தற்பொழுது புதிய பணி நியமனங்கள் இல்லாததாலும் இவர்களுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதாலும் அவர்களைப் பணி நியமனம் செய்ய முடியாது என்று பதிலளித்தது.

இதற்கிடையில் 2005ல் புதிதாக ஊழியர்கள் திறந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த 17 பேரும் இதனைச் சுட்டிக்காட்டி தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார்கள். அந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் பால் வசந்தகுமார் அவர்கள் இந்த 17 பேரும் தங்கள் இளவயதில் இந்த நிறுவனத்திற்காக உழைத்திருப்பதால் அவர்கள் வயதைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று 05-09-2006 அன்று மிகச் சிறப்பான தீர்ப்பளித்தார்கள்.

நிர்வாகம் அதையும் எதிர்த்து மேல் முறையீடு செய்தது. நீதிமன்றம் வழிகாட்டுதல்தான் (Direction) செய்துள்ளதே தவிர ஆணை (Order) எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று நிர்வாகம் வாதாடியது.
இந்த வழக்கில் நீதிபதி மாண்புமிகு சுகுணா அவர்கள், நிர்வாகம் இந்த 17 பேருக்கும் உடனடியாக திருச்சியில் கிரேடு IV வேலை வழங்க வேண்டும், திருச்சியில் காலி இடம் இல்லாவிட்டால் அதன் சகோதர யூனிட்களிலாவது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று 12-04-2007ல்  ஆணை பிறப்பித்தார்கள்.

இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களின் பிள்ளைகள் சிலர் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து NMR ஆக பணிபுரிந்து இதேபோல் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களும்  NMR ஆக பணிபுரிந்து நிறுத்தப்பட்ட இன்னும் சிலரும் தங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்கள்.

இந்த வழக்கை நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் விசாரித்து அப்ரண்டிஸ் சட்டம், நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் கொள்கை, இதேபோன்று பல்வேறு மாநில அரசுகள், நிறுவனங்களில் நடைபெற்ற வழக்குகள், தீர்ப்புக்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு கிரேடு IV வேலை வழங்கியிருக்கும்போது இவர்களுக்கு மறுப்பது தவறு. ஒரே தலைமை அதிகாரியின் கீழ் இயங்கி வரும் இரு நிறுவனங்களுக்கிடையே வவேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது தவறு என்றும், எனவே, இவர்கள் அனைவருக்கும் நான்கு வார காலத்திற்குள் திருச்சி நிர்வாகம் நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று     12-10-2007ல் சிறப்பான தீர்ப்பினை வழங்கினார்கள்.

அந்தத் தீர்ப்பையும் மதிக்காத நிர்வாகம் தனி நீதிபதி (Siingle judge) கொடுத்த தீர்ப்புக்களை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆணவத்துடன் மீண்டும் மேல் முறையீடு செய்தது.

இதன்பிறகு இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வினை (Bench)  மதுரை உயர்நீதிமன்றம் அமைத்தது. நீதியரசர்கள் மாண்புமிகு P.K மிஸ்ரா, P.முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் அப்ரண்டிஸ் அசோசியேசன் உட்பட இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 159 பேருடைய  வழக்குகளையம் ஒன்றிணைத்து விசாரித்தது.

அப்பொழுது 27 வது பேட்ச் பற்றவைப்பாளர்கள் பதினேழு பேருடைய பெயர் நிரந்தரப்பணிக்காகத் தேர்வுபெற்றோர் பட்டியலில் இருப்பதாக தந்தியிலும் கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தீர்களே, அந்தப் பட்டியலைக் கொண்டு வாருங்கள் என்று நீதியரசர்கள் கேட்டபொழுது நிர்வாகம் அந்தப்பட்டியல் தற்சமயம் எங்களிடம் பாதுகாக்கப்படவில்லை என்று கூறியது.

இவ்வளவு பெரிய நிறுவனத்தில் உங்களிடம் அப்ரண்டிஸ் பயின்று NMR ஆக பணிபுரிந்தவர்களின் பட்டியலைக்கூடப் பராமரிக்க முடியவில்லையா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுபோல் வினா எழுப்பி அதற்கு கண்டனமும் தெரிவித்தார்கள். அதற்கு இஞ்சி தின்ற மனிதனின் முன்னோடி போல விழிபிதுங்கி நின்றது நிர்வாகம்.

அத்துடன் இராணிப்பேட்டையில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கியிருக்கும்போது அதே தலைமையின் கீழ் இயங்கும் திருச்சியில் வழங்குவதற்கு என்ன கேடு என்று கேட்டு இவர்கள் அனைவருக்கும் திருச்சி நிர்வாகம் நான்கு வார காலத்திற்குள் நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று தனிநீதிபதி சந்துரு 12-10-2007ல் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து              14-05-2008 அன்று அமர்வு நீமன்றமும் தீர்ப்பளித்தது.

நான்கு வார காலத்திற்குள் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று தீப்பளிக்கப் பட்டிருக்கும்போது நான்கு மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை.
இந்த வழக்கில் உள்ள நியாயங்களை சட்டப்படியும் நியாயப்படியும் சரியானதென்று கூறி ஆறு நீதிபதிகள் அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தும் பெல் நிர்வாகம் அதனை மதித்து அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. நீதிமன்றத்தையும் நீதியையும் தீர்ப்புக்களையும் இந்த நாட்டு அரசியல் சட்டத்தையும் அவமதிக்கிறோம் என்ற உணர்வு பெல் அதிகாரிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இவற்றைவிட இங்குள்ள அதிகாரிகள் மிகமிகப் பெரியவர்களா? இவர்களுக்கு இந்த அதிகாரத்தை; கொடுத்தது யார்? இவர்கள் இந்திய அரசுக்கும் அதன் சட்டத்துக்கும் நீதிக்கும் தீர்ப்புக்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லையா?

அப்படியானால் இவர்கள் தனிராஜ்யம் நடத்துகிறார்களா?
முன்னாள் அப்ரண்டிஸ் அசோசியேசன் நிர்வாகிகள் அய்என்டியுசி நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் சென்று பெல்நிறுவன முதன்மை மேலாண்மை இயக்குனர் திரு இரவிக்குமாரிடமும் முறையிட்டிருக்கிறார்கள். அவரும் இந்த அதிகாரிகளுக்கு இத்தீர்ப்பை அமுல்படுத்தச்சொல்லி அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

அதற்கும் இவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால் இவர்கள் யாருக்குத்தான் கட்டுப்படுவார்கள்?

ஒருவேளை பிரதமர் சொன்னால் கட்டுப்படுவார்களா? அல்லது குடியரசுத்தலைவர் சொன்னால் கேட்பார்களா?

நியாயப்படியும் சட்டப்படியும் போராடிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு அவற்றில் தீர்வு ஏற்படவில்லையென்றால் அவர்கள் வன்முறையைக் கையிலெடுத்தால் என்னாவது? இதுபோன்ற அதிகாரிகளால் இந்த நாட்டில் வன்முறையும் தீவிரவாதமும் தலையெடுக்காதா?

ஆறு நீதிபதிகள் தீர்ப்பளித்த பிறகும் அதனை அமுல் படுத்த மறுத்து சண்டித்தனம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இதனை இங்குள்ள சங்கங்கள் (அய்என்டியுசி தவிர) யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதும் வேதனையானது.
எனவே, பெல் திருச்சி அதிகாரிகள் இந்த நாட்டின் சட்டத்திற்கும் நீதிக்கும் நீதிமன்றத்திற்கும் அதன் தீர்ப்புக்களுக்கும் மதிப்பளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி உடனடியாக இவர்கள் அனைவருக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும். இல்லையேல் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.

இவண்

சனி, 11 மார்ச், 2017

திலகரின் பார்ப்பனீய வெறி "

"தேச பக்தரின் பார்பனீய பக்தி"

" திலகரின் பார்ப்பனீய வெறி "


சென்னை மாநிலத்தில் பார்ப்னர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தலை தூக்கிய காலகட்டம் .

பார்ப்பனர் அல்லாதாரரும்
சட்டமன்றம் செல்லத் தீர்மானித்த அந்தப் பொழுதில் திலகர் என்ன சொன்னார் தெரியுமா ?

"இப்பொழுது எல்லோரும்
சட்டசபைக்குப் போகவேண்டுமென்று முயற்சி
செய்கிறார்கள்.
எதற்காக செருப்பு தைக்கிறவனும் ,
எண்ணெய் செக்கு ஆட்டுபவனும் ,
சிறு கடைக்காரனும் ,
(The cobblers ,The oil Mongers ,
and petty-traders) சட்டசபைக்குச்
செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள் ?

யார் யார் எது எதற்குப் போகவேண்டுமென்ற வரைமுறை கிடையாதா ?"
என்று பேசினாரே !

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் " காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்தது என்ன ?"(What Gandhi and Congress have done to untouchables ?")என்ற நூலில்
குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளார் 

தோழியர் மீனாம்பாள் சிவ அரசு

" இந்தி எதிர்ப்பு "
13.11.1938 பிற்பகல் ஒரு மணிக்குச் சென்னை பெத்துநாயக்கன்
பேட்டையிலிருந்து இந்தி எதிர்ப்பு - பெண்டிர் ஊர்வலம் தமிழ் முழக்கங்களுடன் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையைச் சென்றடைந்தது.5000 பெண்களும் ஏராளமான
ஆடவர்களும் அரங்கின் உளுளும் புறமும் நிறைந்திருந்தனர்.
தமிழர் வரலாற்றிலேயே அன்றுவரை அத்தகைய மாநாடு இருந்ததில்லை.

தோழியர் மீனாம்பாள் சிவ அரசு தமிழ்க்கொடி உயர்த்தினார்.

திறப்பாளர் : பண்டிதை நாராயணி அம்மையார்

வரவேற்பு : 
வ பா தாமரைக்கண்ணி அம்மையார்

தலைமை :தோழியர் நீலாம்பிகை அம்மையார்

நாகம்மையார் | தோழியர் 
படத்திறப்பு | பார்வதி 
| அம்மையார்

தீர்மாணங்கள் :
1)தோழர் ஈ வே ரா அவர்களைப் பெரியார் என சிறப்பித்தல்

2)புரோகிதரில்லா எளிமையான திருமணம் இ

3) கலப்புத்திருமணம் இ 

4)மாதர்மறுமணம் . 

5)தமிழ்மொழியைப் பள்ளிகளில் கட்டாய பாடமாக்குதல் இ

6)இந்தி எதிர்ப்புப் போரில் சிறைசென்ற தோழர்களுக்குப் பாராட்டு இ 

7)இந்தி எதிர்ப்புப் போரில் வீரர்கள் சிறையடைப்பினைக் கண்டித்தல் இ

8)புகைவண்டி நிலைய பெயர்பலகைகளை தமிழில் எழுதுதல் இ தமிழில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டினை வழங்கல் இ

9)ஓரணா இ நாலணா நாணயங்களில் மதிப்பைத் 
தமிழில் குறித்தல் போன்ற 
ஒன்பது தீர்மாணங்கள்
நிறைவேற்றப்பட்டன.

பேச்சாளர்கள் : 
பண்டிதை கண்ணம்மாள் இ

கலைமகள் அம்மையார் இ

இராமிர்தத்தம்மையார் இ

கமலம்மாள்இ 

சிறுமி குஞ்சிதமணி நீலாயதாட்சி

ஆர் நாராயணி அம்மையார் இ

மலர்முகத்தம்மையார் இ

இராணி அம்மையார் (அண்ணா ) ♪

தீர்மாணம் 1.

இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய
இயலாமற்போன வேலைகளை நம்
மாபெருந் தலைவர் ஈ வே ரா அவர்கள் செய்து வருவதாலும்இ
தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவர் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும்போது
" பெரியார் " என்ற
சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும் .

மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?

மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?


பொசுங்கட்டும் மனுதர்மம்!



மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?




மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரிகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு  அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கண்டனத்துக்கு அறி குறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறோம் என்று முழக்கமிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மகத் நகரில் கூடிய சத்யா கிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலை மையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.


மகத் நகரின் சவுதார் குளம் ஜாதி இந்துக்களும் எல்லா ஜாதியினரின் விலங் குகளும் புழங்குவதற்குரியது. தலித்து களுக்கோ புழங்குரிமை இல்லை. இத்தடையை நீக்குவதென 1924இல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற ஜாதி இந்துக்கள் விடவில்லை. 1927 மார்ச் 19இ20இல் மகத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித் அல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம் பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்திஇ நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர். ஆத்திரமடைந்த ஜாதி இந்துக்கள் தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன் முறையை ஏவினர். எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லை என்றார் அம்பேத்கர். ஜாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால் தயிர் மாட்டு மூத்திரம் சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்துத் தீட்டு கழித்தனர்.


இதனிடையே மகத் நகரசபை தலித் துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4 இல் ரத்து செய்தது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மகத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக் கானது அல்ல என்பதை உணர்ந்த ஜாதி இந்துக்கள், நீதிமன்றத் தடையாணை பெற்றனர். இடம், தண்ணீர், மளிகைப் பொருட்களை வழங்க மறுத்தனர். ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது! “இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்கிற அம்பேத்கரின் பதிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர். சகஸ்திரபுத்தே என்கிற பிராமணர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப் பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத் கர்தான் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க் சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதி வரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண் டிருந்தவர். மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927இல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜாவிடமிருந்து வெடித்தது. மகத்துக்கும் முன்னதாகவே 4.12.1927இல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார். மகத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்து போன மநுஸ் மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்க லாய்ப்பே அதன் இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு அந்நியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே என்றார். நிம்மதியிழந்த பார்ப்பன பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற் றாண்டுகளாக எங்களுக்கு இழைக் கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிரு தியைக் கருதியதாலேயே எரித்தோம். அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தி யெடுக்கும் கோரக் கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளா கியுள்ளோம்.


எனவே அதற்கு எதிராக வரிந்து கட்டினோம். உயிர்களைப் பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம் நினைத்ததைச் செய்து முடித்தோம்... விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி, தட்சணையாகப் பொருள் ஈட்டு வதே வேதமதம்; அதை எதிர்த்தெழுந்த பவுத்தம். அசோகரால் மகதத்தின் அரச மதமாக்கப்பட்டதால் உயிர்ப்பலி தடுக் கப்பட்டது. அரசு ரீதியான ஆதரவுகளை இழந்த பார்ப்பனர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர்.  உயிர்ப் பலியிலும் சோம யாகத்திலும் நம் பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185இல் ஆட்சியைக் கைப்பற்றினான்.


ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்லுவ தாயிருந்தது - அவனது பவுத்த வெறுப்பு. பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத் கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக் காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150-க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.


பூமியின் கடவுள்களாக பிராமணர் களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது. யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விரிவாக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. இத்தனைக்கும் அது பரசுராமனால் கொல் லப்பட்ட சத்திரியர்களின் விதவைகள் -  பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. பட்டத்து மகிஷியைக் கன்னி கழிப்ப தையும் பார்ப்பனர்களின் உரிமையாக்கியது அது. பெண்கள் அனைவரையும் சூத்திரர் களையும் உயிர் வாழ்தலுக்கும் சுதந் திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ் விற்கும் உரிமையற்றவர்களாக மநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத் கர் அதை கொளுத்துவதற்குத் தலைமை யேற்றது பொருத்தமானதுதான். ஒரு குறியீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ் மிருதியை எரித்த போராட்டத்தை “குடிமக்கள் யாவரும் சமம்” என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவது வரை அம்பேத்கர் முன்னெடுத்தார்.


அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராகக் கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்தச் சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளிய சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில் அரவணைத்து நெரிக் கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்கு வதாகவும் பசப்புகிறது.


பட்டியல் ஜாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக் கிறது. இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் ஜாதியினரான இவர்கள் இஸ்லா மியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப் பட்டனர் என்று திரிக்கிறார்.


அது மட்டுமல்லாது மநுஸ்மிருதியை உயர்ஜாதியினரின் புனிதநூலென அம் பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்ஜாதியினரான தலித்துகளும் மநுஸ் மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடுகிறார் - எப்படி தந்திரம்.


- மின்சாரம்



செவ்வாய், 7 மார்ச், 2017

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?


தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது என்பதில் மிகவும் துருதுருத்து இருப்பவர்களில் சிலர் அயோத்திதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரை பெரியார் மறைத்தார் என்று குற்றஞ் சாட்டி வருகின்றனர். யாரையும்  மறைத்தோ, இருட்டடித்தோ ஈரோட்டுச் சிங்கம் தன்னை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர் - அது சுயச் சிந்தனையின் ஊற்று _ -சுட்டெரிக்கும் சூரியன்!
திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநா வுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? எனும் நூலில் இதுகுறித்துத் திரட்டித் தந்துள்ள விளக்கம் இதோ!
அயோத்திதாசரது நூல்கள்: பூர்வத் தமிழொளி எனும் புத்தரது ஆதிவேதம், விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா - விடை, இந்திரர் தேச சரித்திரம், விசேஷ சங்கைத் தெளிவு, விவேக விளக்கம், தென்னிந்தியர் தேச புத்த சாட்சியக்காரர்களில்  ஒருவராகிய ஸ்ரீஅம்பிகை அம்மன் அருளிய திரிவாசகம், ஆத்திசுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம், தென்னிந்தியர் தேச புத்த தர்ம சாட்சியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீமுருகக்கடவுள் வரலாறு, யதார்த்த பிராமண, வேஷ பிராமண வேதாந்த விவரம் ஆகியனவாகும்.
இந்த நூல்கள் எல்லாம் நமக்கு 1980ஆம் ஆண்டின் கடைசியில்தான் கிடைத்தன. 1960களில் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்த நமக்கு -_ பெ.சு. மணி எழுதியதற்கு பிறகு -_ நம் தோழர் எஸ்.வி. இராஜதுரை நீலகிரியிலிருந்து படியெடுத்து அனுப்பினார். இதற்கு இடையில் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. இப்படி நூல்கள் இருப்பதாகவே எவர்க்கும் தெரியாமல் போனதேன்? இவற்றை யார் மறைத்தது?
_ 1938 வரை வாழ்ந்த ஆர். வீரையன் அயோத்திதாசர்க்கு என்ன செய்தார்?
_ 1941 வரை வாழ்ந்த ம. பழனி சாமி அயோத்திதாசரது சிந்தனை களைப் பிரச்சாரம் செய்தாரா?
_ 1945 வரை வாழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளை _ நூல்களை முன்னெடுத்துச் செல்லாமல் பதிப்பிக்காமல் போனதேன்?
_ 1947 வரை வாழ்ந்த எம்.சி. ராஜா அயோத்திதாசரை நினைவுபடுத்த என்ன செய்தார்?
_ 1958 வரை வாழ்ந்த சுவாமி சக ஜானந்தாவுக்கு அயோத்திதாசர் பற்றிய மதிப்பீடு என்ன? அவர் அயோத்தி தாசரது சிந்தனைகளுக்குச் செய்தது என்ன?
_ 1964 வரை வாழ்ந்த மேயர் சிவராஜ் அயோத்திதாசரது சிந்தனை களை முன்னெடுத்துச் செல்ல உதவினாரா?
_ 1966 வரை வாழ்ந்த எல்.சி. குருசாமி அயோத்தி தாசரது சிந்தனைகளை வெளிப்படுத்தாதது ஏன்?
இப்படி நாங்களும் தாழ்த்தப்பட்ட தலைவர்களை வரிசைப்படுத்திக் காட்டிக் கேட்க முடியும்?
ஏன் திருமாவளவனைக்கூட இப்படிக் கேட்க முடியும்? அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாட்டுக்குத் திருமாவளவன் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.
இக்கட்டுரையாளரான நாம் தலைவர் அல்லர். ஓர் ஆய்வாளன். நம்மினமும், மொழியும், நாடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என்பதன்றி நமக்கு வேறொரு பேராசை எப்போதும், எதிலும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஆகவேதான் திருமாவளவன் இவற்றையெல்லாம் விளக்கினால் விளங்கிக் கொள்ள நாம் ஆயத்தமாய் இருக்கின்றோம்.
அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய சிந்தனைகளை ஒருவாறு உள்வாங்கிக் கொண்ட நாம், 1990ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் பரிதி. இளம்வழுதியைச் சந்தித்தோம். நாம் அயோத்தி தாசரைப்பற்றிப் படித்ததை எல்லாம் எடுத்துக் கூறினோம். வியந்தார்.
அப்போது பரிதி, எங்க அப்பாதான், மேடையிலே பேசும்போது, நாங்க அயோத்தி தாசப் பண்டிதர் பரம்பரையடா என்று சொல்லுவார். எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினார். நாம் அயோத்தி தாசர்க்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நாங்கள் இருவரும் அமைச்சராய் இருந்த க.சுந்தரம் அவர்களைச் சென்று பார்த்தோம். அதன்பிறகே தாழ்த்தப்பட்ட தலைவர்களைப் பற்றிய களத்தில் நின்ற காவலர்கள் எனும் எமது நூல் வெளிவந்தது. அயோத்திதாசர்க்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று விரும்பி மீஞ்சூருக்குச் சென்றோம். சுந்தரம், கும்மிடிபூண்டி வேணு, பரிதி எல்லோரும் அதற்கு உதவ முன்வந்தனர். இதற்கிடையே மறுமலர்ச்சி தி.மு.க. உதயமாயிற்று. தொடங்கிய பணிகள் அப்படியே நின்றுவிட்டன.
இங்கே நாம் பார்க்க வேண்டியது. அயோத்திதாசரது சிந்தனைகள் அவரது மறைவுக்குப் பின் பிரச்சாரம் செய்யப்படவில்லை. அவரது வெளியீடுகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர்களிடையே எடுத்துச் செல்லப்படவில்லை. அவரது சிந்தனைகளை வெளிக் கொணர்ந்தவர்களைப் பாராட்டவில்லை.
அயோத்திதாசரது மரணத்திற்குப் பின் _ அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெரியார் காங்கிரசில் (1919) சேருகிறார். அதற்கு முன்பே அவர்க்குத் தாழ்த்தப்பட்டோர் மீது ஓர் அனுதாபம் இருந்திருக்கிறது. மனித குலத்தின் மிகக் கொடிய பழக்கம் தீண்டாமை என்பதை உணர்ந்த அவர், 1917 ஆம் ஆண்டிலேயே ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது கொங்கப் பறைத்தெரு என்பதை வள்ளுவர் தெரு எனப் பெயர் மாற்றம் செய்தார். ஈரோடு நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புப் பிள்ளைகள் சேரவும், படிக்கவும் வழி செய்தார்.
பெரியாரது குடிஅரசைப் புரட்டினால் எத்தனை ஆதி திராவிட அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அவ்வேட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெரியார்க்கு இயல்பிலேயே மனிதநேயம் இருந்ததால்தான் இப்படியெல்லாம் தொடக்கக் காலத்திலேயே செய்ய முடிந்தது. காங்கிரசில் பெரியார் இருந்தபோது அவர் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்தது. அதைப்பற்றி அம்பேத்கர் பாராட்டி எழுதினார் என்று தனஞ்சய் கீர் (அம்பேத்கர் வரலாற்றை எழுதியவர்) கூறுகிறார்.
அயோத்திதாசரைப்பற்றிய வெளியீடுகள் பெரியார்க்குக் கிடைத்திருக்குமானால் - _ அவரது கவனத்திற்கு எவரேனும் எடுத்துச் சென்றிருப்பார்களானால் கட்டாயம் விமர்சனம் செய்திருப்பார். ஒத்த கருத்துகளை _ உடன்பாடானவற்றைப் பாராட்டியிருப்பார். குடியரசில், விடுதலையில் எழுதியிருப்பார்.
சென்னையில் _ இராயப்பேட்டையில் திரு.வி.க.வின் வீட்டருகிலேயே வாழ்ந்த அயோத்திதாசரின் சிந்தனைகள் திரு.வி.க.வுக்கே கிடைக்கவில்லையே! அந்தக் காலத்தில் ஓர் அறிஞர் நூல் ஒன்று எழுதினால் அறிவார்ந்த பெருமக்களிடம் எடுத்துச் சென்று கொடுத்து அபிப்ராயம் கேட்கின்ற வழக்கத்தை _ எழுதி அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். அயோத்திதாசர் அப்படி யாருக்கும் அனுப்பியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் புரியவில்லை. இதனால் அவரது கருத்துகள் அவர் காலத்திலேயே பரவ வழியில்லாமல் ஆகிவிட்டது.
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்கள் கிடைக் காததனால் தமிழை அவர் போதிக்காமல் விட்டாரா என்ன? அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்திருந்தால் மேலும் சிறப்பாகச் சங்க இலக்கியங்கள் அவரது உரையையும் பெற்றிருக்கும் அல்லவா? அதுபோலத்தான் பெரியார்க்கு அயோத்திதாசரது சிந்தனைகள் நூல்கள் கிடைக்கவில்லை; கிடைத்திருந்தால் அவரது கருத்தைக் கூறியிருப்பார். கட்டாயம் எழுதியிருப்பார்.
வள்ளலார் தமது இறுதிக் காலத்தில் சிந்தனையின் உச்சிக்கே சென்று சமயச் சிந்தனையாளர்களின் வட்டத்திலே ஞான வொளியைப் பாய்ச்சிய மேதை!
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!
நால்வருணம் ஆசிரமம் ஆச்சாரம் முதலாம் நவின்ற
கலைச் சரிதம்எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவார் இல்லை
நீவிழித்திது பார் என்றனுக்கு விளங்கிய சற்குருவே!
என்று பாடுகிறார் வள்ளலார்.
வள்ளலார் (1823_1874) அயோத்தி தாசர்க்கு (1845_1914) முன்பு வாழ்ந்தவர். சைவ சித்தாந்தியாய் இருந்து அதிலும் நம்பிக்கையை இழந்து, ஞானவொளியை நாடியவரை, அயோத்திதாசர் _ அவர்க்குப் பின்வந்தவர் என்பதால் அவரைப்பற்றி இவர் ஒன்றும் சொல்லவில்லையே என வருத்தம் கொள்ளுவது, விமர்சனம் செய்வது எப்படி நமக்குக் குறையாகக் கொள்ள முடியாதோ, அப்படியே பெரியாரது எழுத்துக்களில் அயோத்திதாசரது சிந்தனைகளை விமர்சனங்களை அல்லது பாராட்டைத் தேடுவது, குறையாகக் கொள்ள முடியாது என்றே நாம் கருதுகின்றோம்.
அயோத்திதாசரது கருத்துகளைப் பற்றிப் பெரியார் கருத்து கூறாததற்கு, எந்தவித உள்நோக்கமும் இருக்க முடியாது என்பதை, அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்து வதால்தான் இப்படிக் குறிப்பிடுகின்றோம் என்கிறார் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு.
இதற்கு மேலும் விழிக்கவில்லை என்றால், குற்றம் சொல் வோர் பொய்த் தூக்கம் போடுவோரே!


திங்கள், 6 மார்ச், 2017

சடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை

சடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை

உதயசங்கர்
revolution 4

பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.
ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பத்தின் நலன்களைப் பராமரிக்க சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள் ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான். மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?
“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “
( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )
அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும்  அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம். இப்படி பெண்களின் ஆன்மீக உரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.
“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )
“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )
“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “
( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)
பெண்களை இழிவு படுத்தும் மனு,  புத்தருக்குப் பின் வந்தவர். புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆதி மனிதகுலத்தில் நிலவி வந்த தாய்வழிச்சமூகத்தில் பெண்ணே தலைமைப் பொறுப்பை வகித்து வந்தாள். வேட்டைச்சமூகமாக இருந்தவர்கள் நிலையாக ஓரிடத்தில் வாழத்தொடங்கிய பின்னர் விவசாயம் வளர வளர கிடைத்ததைப் பகிர்ந்துண்ட வேட்டைச்சமூக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தேவையைத் தாண்டிய உபரி தனிச்சொத்துடமையை அறிமுகம் செய்தது. தனிச்சொத்துடமையின் விளைவாகவே பெண்ணின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களின் பாலியல் சுதந்திரம்.
ஒரு காலத்தில் உற்பத்தி / மறு உற்பத்தியின் குறீயீடாக  பெண்ணின் யோனி வணங்கப்பட்டது. அப்போது தாயே வாரிசுகளுக்கு அடையாளமாக இருந்தாள். ஆண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. சொத்துடமை தோன்றிய பிறகு ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கினான். அதற்காகவே பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த விரும்பினான். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தின் பத்தினி / பரத்தை என்று ஆணை மையமாக வைத்து எதிர்மைகளை உருவாக்கினான். உற்பத்தியின் ஊற்றாக இருந்த யோனி இப்போது பாவக்குழியாகியது. உற்பத்தியின் முன்னறிவிப்பான பூப்பு இப்போது தூமையென்று இழிவானதாக, தீட்டாக, உருவகிக்கப்பட்டது. இந்தத் தீட்டை உற்பத்தி செய்கிற பெண்ணும் இழிவானவளாக கருதப்பட்டாள்..
பெண்கள் தங்கள் விருப்பம் சார்ந்து பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது பாவம் என்றும் அதற்குக் கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன / நிறைவேற்றப்படுகின்றன. இதில் எல்லாமதங்களும் ஒன்று போல கை கோர்த்து செயல்படுவது யதேச்சையானதாகக் கருத முடியாது. அவர்கள் உலவும்சமூகவெளியைச் சுருக்கி வீட்டுக்குள் முடக்கினார்கள். அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.
“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )
“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”
( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )
ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது? மீண்டும் வாசிக்க 213. அத்தியாயம் 2-டை. பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.
அதுமட்டுமில்லாமல் பிறந்ததிலிருந்து ஆடை, ஆபரணங்கள், அலங்காரங்கள், தலைமுடி வளர்த்து பூச்சூடி, பொட்டிட்டு, அறிந்தோ அறியாமலோ ஆண்களின் கண்களுக்குக் காமப்பண்டமாகவும், அதே ஆடை அலங்கார விவகாரங்களே பெண்ணின் விலங்குகளாகவும் மாறி விடும் விந்தையினை நாம் பார்க்கிறோம். பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கம் அதன்மீது தன் வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறது. பெண்ணின் சமூகஅதிகாரம் பறிக்கப்பட்டபிறகு நடந்த வரலாற்றின் சுவடுகளில் பெண்ணின் இரத்தமும் தெறித்திருக்கின்றன. பெண்ணின் பாலியல் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு சாதித்தூய்மை அல்லது இனத்தூய்மைக் கொள்கையும் ஒரு காரணம். இன்றளவும் சாதியத்தூய்மையைக் காப்பாற்றும் காவலாளியாகப் பெண்ணையே பொறுப்பாக்குகிறார்கள். வர்ணாசிரம அதர்மத்தின் அரிய கண்டுபிடிப்பான அகமணமுறையின் மூலம் சாதியத்தூய்மையைக் காப்பாற்ற பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த அகமணமுறையக் காப்பாற்றவே வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே இத்தனை சடங்குகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றை தீட்டு / புனிதம் என்ற கருத்தாக்கங்களின் மூலம் மனங்களில் விதைத்து வளர்ப்பதன் மூலம் நிலை பெறச்செய்கின்றனர் சநாதன வாதிகள்.
கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம். எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறாள்.
பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது. இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.
“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “
பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனுதர்மத்தைக் கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சடங்குகளிலிருந்து, சாஸ்திரங்களிலிருந்து பெண்கள் தங்களை விடுவிக்காதவரை மனிதகுல விடுதலை முழுமையடையாது.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.

மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கம்


ஈரோட்டில் நடந்த மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டில் டிசம்பர் 23 அன்று நடைபெற்ற தடை போடும் சாஸ்திரங்களும் தடம் காட்டும் பெரியாரியமும் என்ற கருத்தரங்கிற்கு தலைமையேற்று பேராசிரியர் சரசுவதி நிகழ்த்திய உரை.

இந்த மனுதர்ம சாஸ்திரம் என்று சொல்லப் படுகிற இந்த அதர்ம சாஸ்திரம், ஒருநபரால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எழுதப்பட்டதல்ல என்ற வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கலாம். எப்படி ஒளவை என்ற பெயராலே தமிழ் நிலத்தில் பல ஒளவைகள் வாழ்ந்திருந்தார்களோ, அதைப் போல மனு என்ற பெயரிலே இந்த மண்ணிலே ஒரு ஒன்பது பேராவது இருந்திருக்கிறார்கள். கிட்ட தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு பின், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்ட அவர்களுடைய கருத்துக்களை ஒன்று திரட்டி, ‘மனுதர்மசாஸ்திரம்’ என்ற பெயரில் அதர்மங்களை கூட்டி தந்திருக்கிறார்கள். இந்த மனுவை நாம் எதிர்க்கிறோம் – சாஸ்திரங்களை எரிக்கிறோம் என்று சொன்னால், அந்த புத்தகத்தை எரிப்பது என்ற பொருள் அல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த மனுசாஸ்திரங்களும், புராணங் களும், இதிகாசங்களும் என்னென்ன நச்சு விதைகளை - நஞ்சை, இந்த சமுதாயத்தினுடைய நாடி நரம்புகளிலும், இரத்த ஓட்டங்களிலும் கலந்துவிட்டிருக்கின்றனவோ, அந்த நச்சு விதைகளை - நஞ்சை, இந்த சமுதாயத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கிவிட்டு, புது இரத்தம் பாய்ச்சவேண்டும், அந்த புது இரத்தத்தில் எந்த விதமான சமூக துவேசமும் இருக்காது; எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது; எந்த விதமான மூடநம்பிக்கைகளுக்கும் அதில் இடம் இருக்காது; அது மதக் கலாச்சாரத்தை பின்பற்றாது. அது மனித உரிமை கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாம் இந்த மாநாட்டை நடத்திகொண்டிருக்கிறோம்.

அருமை நண்பர்களே ! பகுத்தறிவாளர்கள் அன்று முதல் இன்று வரை முழுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிற ஒரு சாஸ்திரம் இருக்கிறது என்றால் அது இந்த மனுதர்மசாஸ்திரம் தான். ஏனென்றால் இந்த மனுசாஸ்திரத்தால் யார் தொடர்ந்து பயன் பெற்றுக் கொண்டிருக் கிறார்களோ, அவர்கள் அவ்வளவு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்து மதத்தை தாங்கிப் பிடிக்கிற தூண்களான வேதங்கள், உபநிசத்துக்கள், இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், இன்னும் பல புராணங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சொல்கின்றது, இருக்கின்ற பதினெட்டு ஸ்ருதிகளில், பதினேழு ஸ்ருதிகள் ஒன்றைச் சொன்னாலும், பதினெட்டாவதாக இருக்கின்ற மனுஸ்மிருதி என்ன சொல்கின்றதோ அதைத்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெளிவாக அவர்கள் சொல்கின்றார்கள். ஏனென்றால் இந்த மனுஸ்மிருதி என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு சாதகமான ஒரு ஸ்மிருதியாக இருக்கின்றது. மற்ற ஸ்மிருதிகள் வேறு வேறு கருத்துக்களை சில இடங்களில் சொன்னா லும் கூட, இது எந்த இடத்திலும் பார்ப்பன மேலாண்மையை – ஜாதிய  மேலாண்மையை - ஆணாதிக்க மேலாண்மையை நியாயப்படுத்துகின்ற ஒரு போக்கை மிகத் தெளிவாக மனுஸ்மிருதிதான் காட்டுகின்றது.

அருமைத் தோழர்களே! உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; அந்த கடவுள் மந்திரங்களுக்கு கட்டுபட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணன் தான் கடவுள். ஆக பிராமணனை கடவுளுக்கு ஒரு படி மேலானவனாக கருதி அவனை வழிபடவேண்டும் என்று இந்த சாஸ்திரம் சொல்லுகின்றது. பார்ப்பனன் தான் உலகத்தை படைத்தான் என்பதை மனுஸ்மிருதி மட்டுமல்ல கீதையும் சொல்கிறது, நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று. இவனால் படைக்கப்பட்ட இந்த சமுதாய அமைப்பில், படைக்கும் போதே மனிதர்களை வர்ணரீதியாக – ஜாதிரீதியாக கூறுபோட்டுவிட்டு, ஜாதிக்கொரு தொழில் என்று ஏற்படுத்திவிட்டு, பிறகு இன்னின்ன தொழில்களை செய்பவன் உயர்ந்தவன், இன்னின்ன தொழில்களை செய்பவன் தாழ்ந்தவன் என்று அடையாளப்படுத்திவிட்டு, அதனடிப்படையில் அவர்களை விலக்கிவைப்பது – தீண்டக்கூடாத ஜாதியாக்குவது - ஊருக்கு வெளியே வைப்பது என்றெல்லாம் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்துகொண்டிருப் பதற்கு இந்த மனுசாஸ்திரம் உள்ளிட்ட சாஸ்திரங் கள்தான் இவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

சிலர் சொல்வார்கள் மனுவின் காலம் தான் முடிந்து விட்டதே, இறையாண்மையுள்ள அரசியல் அமைப்புச் சட்டமல்லவா ஆண்டு கொண்டிருக் கிறது. சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்று தானே அந்த அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது; ஏன் நீங்கள் மனுவையும், பார்ப்பனர் களையும் வம்படியாக இழுத்துக் கொண்டிருக் கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அருமைத் தோழர்களே,  நம்மையெல்லாம் வழிநடத்திச் செல்வதாக கூறப்படுகிற, அரசமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அம்பேட்கர் எழுதியிருந்தாலும் கூட, அந்த அரசமைப்புச் சட்டத்தில் “ஹிந்து பர்ஸனல் லா” என்று சொல்கிறார்களே, அது எதனடிப்படை யில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த புராண, சாஸ்திர, இதிகாசங்களின் அடிப்படையில் தான் இந்த ஹிந்து பர்ஸனல் லா சட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் வரும்போதெல்லாம் நீதி யரசர்கள் புராண, சாஸ்திர, இதிகாசங்களைத் தான் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே தான் தோழர்களே இந்து மதத்தின் பெரு மகன்களாக பார்ப்பனர்களாலேயே தூக்கிப் பிடிக்கப்படும் விவேகானந்தர் போன்றவர்கள் சொன்னார்கள், பார்ப்பனர்களே, நீங்கள் இந்த சமுதாயத்தின் இரத்த ஓட்டத்தில் நஞ்சை கலந்து விட்டீர்கள்; அந்த நஞ்சை நீங்களே உறிஞ்சி எடுத்துவிடுங்கள் என்று - அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து தீங்கு விளைவித்து கொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருக்கின்ற, இவைகளை அழித் தொழிக்கும் வேலையே ஒரு ஆக்கப்பணி தான். எரிக்க வேண்டும். எரிக்கவேண்டுமென்றால் நம்முடைய மக்களின் மனதிலிருந்து - சமுதாயத்தின் பொதுபுத்தியிலிருந்து - நம்முடைய சிந்தனைகளி லிருந்து - பின்பற்றிக் கொண்டிருக்கிற பழக்க வழக்கங்களிலிருந்து அவைகளை முற்றிலுமாக துடைத்து எறியவேண்டும், அவைகள் மீண்டும் தோன்றாவண்ணம் நாம் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அதனுடைய கருத்தாக இருக்கின்றது. அதனால் தான் பார்ப்பன பாரதிகூட சொன்னான், ஜாதிக்கொரு நீதி பேசுகின்ற இந்த சாத்திரங்களை, சாத்திரம் என்று சொல்லாதீர் சதி என்றே சொல்லுங்கள் என்று. சமூகத்தின் சரி பாதியாக இருக்கின்ற பெண் மக்களை, இந்த மனுசாஸ்திரம் எத்தகைய கேவலமான பார்வையால் பார்த்திருக்கின்றது; பெண்களை அது விலங்கினும் கீழாய் மதித்திருக் கின்றது; பெண்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லாத அற்ப ஜந்துக்களாய், ஒரு பெண் என்பவள் வாங்கவும், விற்கவும் அடமானம் வைக்கவும் தகுதியான ஒரு பொருள் என்றே காட்டியிருக்கிறது.

அந்த அடிப்படையில்தான், இந்த ஜாதிய ஆணாதிக்க சமூகம் பெண்களை நடத்திக் கொண் டிருக்கிறது என்பதற்கு, அண்மையிலே நடந்த டெல்லி விவகாரத்திலிருந்து ஏராளமான உதாரணங்களை நாம் சொல்லமுடியும். அதேபோல தான் இந்த கெடுமதியாளர்கள் ஏற்படுத்திய ஜாதிய கட்டமைப்பை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக் கின்ற நம்முடைய சூத்திரர்கள் – நம்முடைய தலித் சகோதரர்கள் சமுதாயத்தில் இருபத்தி ஐந்து விழுக்காடு கொண்ட இவர்களை, எந்த விதமான உரிமையும் கிடையாது. எந்த விதமான சலுகையும் கிடையாது அவர்கள் மனிதர்களே அல்ல.
மனித மேலாண்மை குணங்கள் அவர்களுக்குக் கிடையாது என்பதைப் போல மனிதர்களுக்குரிய அனைத்து உயர் நலன்களையும் மறுத்து அவர்களை மிகக் கேவலமாக நடத்தப்படுவதை ஜாதியின் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு போக்கு இது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதே, அந்த போக்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கான பதிலை நீங்கள் தேடத் தொடங்கினால், நீங்கள் மனுவிடம் போய் நிற்பீர்கள். எனவே தான் இந்த மனுவை புதைப்பதன் மூலம் மனுஅநீதி சாஸ்திரம் சொல்லுகின்ற அந்த கருத்துக்களை வேரோடும் வேரடிமண்ணோடும் களைந்து எறிந்துவிட்டு அங்கே புதிய விதைகளைத் தூவவேண்டும். அந்த தூவப்படுகின்ற புதிய விதைகள் என்ன உள்ளடக் கத்தை கொண்டவைகளாக இருக்கவேண்டும் என்றால் அவைகள் மனித உரிமைகளை உள்ளடக்கமாக கொண்டிருக்கவேண்டும். சமத்து வத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மனித நேயத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மனிதத்தை உள்ளடக்கமாக கொண் டிருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட உள்ளடக்கங் களைக் கொண்ட ஒரு விதை எந்த தத்துவத்தில் இருக்கின்றது யார் மொழிந்திருக்கிறார்கள் என்று கேட்டால் நமக்கு தெரிந்த வரையில் தந்தை பெரியார் அவர்கள் தான் இத்தகைய உள்ளடக் கத்தை கொண்ட விதையினை இந்த மண்ணிலே தூவியிருக்கிறார்கள். எனவே தான் மனுவை புதைக்கிறோம், மனுவை ஒழிக்கிறோம், ஒழிக்கப் பட்ட அந்த இடத்தில் எந்த நல்லதை நாம் வைக்கிறோம் என்றால், மதம்சார்ந்த கலாச்சாரத்தை ஒழித்துவிட்டு, மனித உரிமை கலாச்சாரத்தை நாம் அந்த இடத்திலே வைக்கிறோம் என்றால், அந்த மனித உரிமை கலாச்சாரத்தை இந்த தமிழ் மண்ணிலே தூக்கிப் பிடித்தவர் யார் அதற்கு வலுவூட்டியவர் யார் அதற்கு தெம்பு கொடுத்தவர் யார் என்று பார்த்தால் நம் கண்ணுக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணிலே தந்தை பெரியாரும், வடக்கே அண்ணல் அம்பேட்கரும், அங்கே ஜோதிபா புலே வும்.

வேதங்களும் சாஸ்திரங்களும் மிகத் தெளி வாகவே சொல்லுகின்றது. ஒரு மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாக அவர்கள் பிரிக்கிறார்கள் பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சன்னியாச  என்று பிரிக்கிறது. மாணவ பருவம், குடும்பத்தை நடத்துகிற அந்த கிரகஸ்த பருவம், இந்த வாழ்க்கையின் நான்கு நிலைகளும், யாருக்கு மட்டும் என்பதை நீங்கள் யோசித்து பார்க்கவேண்டும். துவிஜாஸ் என்ற இரு பிறப்பாளர்கள் - இரு பிறப் பாளர்கள் என்றால், உபநயம் என்று கூறி ஒரு சடங்கை வைத்து பூணூலைப் போட்டுக் கொள் கிறார்கள் அல்லவா? அந்த உரிமை இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே. வாழ்க்கையினுடைய இந்த நான்கு பருவங்களும் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். துவிஜா என்ற நிலையே சூத்திரர்களுக்கு கிடையாது; அவர்கள் பூணூல் போட்டுக்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்கு மாணவப் பருவமோ, திருமண முறையோ, அல்லது வானப்பிரஸ்தமோ, சன்யாசமோ ஆக முடியாது. என்று எழுதி வைத்துக்கொண்டு அதனை நடைமுறை படுத்துகின்ற ஒரு தலைமையை உருவாக்கி,  இந்த மண்ணில் பெரும்பான்மையாக இருக்கின்ற சூத்திரர்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டிருப்பார்கள், எப்படியெல்லாம் உரிமை மறுக்கப்பட்டிருப்பார்கள் என்பதை, நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் சூத்திரர்களுக்கு கல்வியை மறுத்தாய் என்ற கேள்வியை கேட்கும் போது, அவர்கள் சொல்லுவார்கள் கல்வி என்பது அந்த காலத்தில் வேதம் உபநிசதம் போன்றவைகள் தான். அந்த வேதங்களும் உபநிசதங்களும், ஸ்ருதி, ஸ்மிருதி எல்லாமே சமஸ்கிருதங்கள். சமஸ்கிருதம் என்பது தேவபாசை, சமஸ்கிருதம் என்பது நீசர்கள் கேட்கக்கூடாது; அவர்கள் காதில் கேட்டால் அந்த மொழிக்கே தெய்வ குற்றமாகிவிடும்.

எனவே இந்த மொழியை அவர்கள் கற்கக்கூடாது, அவர்கள் காதிலே கேட்கக்கூடாது என்ற காரணத் தினாலேயேதான் சூத்திரர்களுக்கு கல்வியை முற்றிலுமாக அவர்கள் மறுத்தார்கள். சூத்திரர் களுக்கு மட்டுமல்ல இங்கே எடுத்துக் கூறியதைப் போல பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது என்றால் பெண்கள் பிறப்பாலேயே சூத்திரர்கள். அவர்கள் பாவயோனியில் பிறந்தவர்கள். ஆண் களெல்லாம் புன்னிய யோனியில் பிறக்கும் போது, பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள். எனவே அவர்கள் சூத்திரர்களைவிட கேவலமானவர்கள் என்ற ஒரு நிலையை இந்த சாஸ்திரங்களும் புராணங்களும் எடுத்த காரணத்தினாலேயே இங்கு சூத்திரர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றாகவே இருந்தது.
ஆக கல்வி மறுக்கப்பட்ட மிகப்பெரும்பான்மையான ஒரு இனத்திற்கு அந்த கல்வியினால் வருகின்ற அனைத்து நன்மைகளுமே, அனைத்து உரிமைகளுமே மறுக்கப்பட்டன என்பது மிக எதார்த்தமானதாகும், படித்தால்தான் வேலைக்குப் போகலாம், வேலைக்குப் போனால் தான் அரசு பதவிகளை வகிக்கலாம், அரசுப் பதவிகளை வகித்தால் தான் அதிகாரம் கிடைக்கும். அதிகாரம் கிடைத்தால் தான் நம்பிக்கை வரும். நம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையை சரியான தடத்திலே நடத்திசெல்ல முடியும் என்று இவைகள் எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு எண்பது சதவீத மக்களை (பெண்களையும், சூத்திரர்களையும் இணைத்து) தங்களது அடிமைகளாக வைத்துக் கொண்டு, அதற்கொரு நியாயம் கற்பித்து ஒரு பெரும் குற்றத்தை இந்துமத புராணங்களும், இந்து மத இதிகாசங்களும் மற்றவைகளும் செய்திருக் கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான், அது என்ன தேவ பாசை அது என்ன சாதாரண மக்களுக்கு தரக்கூடாது என்று இந்து மதத்தை எதிர்த்துத் தோன்றிய புத்தன், கேள்வி கேட்டான். நீ வேண்டுமானால் சமஸ்கிருதத்தை உன் தேவ பாசையாக வைத்துக்கொள், அதன் மூலம் நீ மக்களுக்கு கல்வியைக் கற்பிக்காவிட்டால் போ. ஆனால் நான் எனது மக்களுக்கு, எனது தாய் மொழி யில், மக்கள் மொழியில் நான் கல்வியை கற்பிப்பேன் என்று புத்தன் கிளம்பிய காரணத்தினாலேயே தான், இந்த பார்ப்பனர்கள், புத்தனை தங்களுடைய எதிரியாக பாவித்து, புத்தமதத்தை இந்த மண்ணி லிருந்து அழித்துவிட, பெரும்முயற்சி மேற் கொண்டு, ஓரளவு அதில் வெற்றியும் பெற்றார்கள் ஆக அறிவு தங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் அறிவு ஒரு அடிமை ஜாதிக்கு சொந்தமாகிவிட்டால், அந்த அடிமை ஜாதி கேள்வி கேட்கத் தொடங்கும் - கேள்வி கேட்கத் தொடங் கினால் நாம் பதில் சொல்லுகின்ற நிலையில் இல்லை என்கின்ற ஏமாற்று புத்தியின் காரணமாக இப்படிப்பட்ட ஒரு பெரிய தீங்கை நம்முடைய சமுதாயத்தின்மீது அவர்கள் ஏவிவிட்டிருக் கிறார்கள். எனவே அடிப்படைக் கல்வியை மறுப்பதன் மூலம் எப்படிப்பட்ட தீங்கை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் அந்த கல்வியின் தேவையை பற்றி மேடைதோறும் முழங்கிய பெரியாரினுடைய அந்த பயன் நமக்கு மிகத் தெளிவாகவே விளங்கும்.

இங்கு சுக்கு என்றும் மிளகு என்றும் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இதைத் தெரிந்து  கொண்டதால்தான் இந்த மக்களோடு ஒரு நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு அரைகுறை ஆங்கிலத்தில் ஒரு கல்வியை கொடுத்தான். அவனுடைய நோக்கமெல் லாம் லண்டனிலிருந்து வெள்ளையர்களை வர வழைத்து தங்களுடைய பணிகளுக்கு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் மிக அதிகமாக இருக்குமென்ற காரணத் தினால் இங்கு இருப்பவர்களுக்கு கொஞ்சம் கல்வி கொடுத்தால் நமக்கு இலாபகரமாக இருக்குமே என்று நினைத் தான். 1938 இல்  மெட்ரிகுலேசன் படித்தவர்களுக்கு  4800 பணியிடங்கள் காலியாக வுள்ளது. மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று அன்று ஆண்டு கொண்டிருந்த கவர்னர் ஜெனரல் ஒரு உத்தரவு பிறப்பித்து சூத்திரர் களையும் சேர்த்து வேலைக்கு எடுத்துக்கொள்ள முயன்ற போது அக்கிரகாரத்துப் பார்ப்பனர்கள் அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள்.
சூத்திரர்கள் வேலைக்கு வந்துவிட்டால் தங்களுக்கு ஆள்வோரிடம் உள்ள செல்வாக்கு போய்விடும்; தங்களுக்கு இருக்கிற  அதிகாரம் போய்விடும்; இந்த நாட்டில் உள்ள சமுதாய கட்டமைப்பே மாற்றம் பெற்றுவிடும் என்று இந்த பார்ப்பனர்கள் மிகக் கடுமையாக எதிர்த்த காரணத்தினாலேயே அன்று போட்ட அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டது. இந்த வரலாறு இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய நூலிலே பதிவாகியிருக்கிறது. ஆக படித்துவர்கள் சூத்திரர்கள் வேலைக்கு வரலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்ட அன்று அந்த 4800 பேரும் வேலைக்கு வந்திருந்தால் இந்தியாவினுடைய சரித்திரமே பெருமளவிற்கு மாறியிருக்கும் என்று நான் சொல்லுவேன். அப்படி நாடி நரம்புகளி லெல்லாம் இந்த பார்ப்பனியத் தீயைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்ற இந்த ஜாதி அமைப்பு சட்டங்களும் நீதிகளும் மண்ணோடு மண்ணாக புதைய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன.

பார்ப்பனர்களின் கருத்தாக்கங்களை தனதாக்கிக் கொண்ட சூத்திரர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தலித் மக்கள் மிக தாழ்ந்தவர்கள் என்றும் சூத்திரர்களிலேயே தங்களுக்குள் ஒரு பிரிவினரை இழிவுபடுத்துகிற நிலையை ஏவிவிட்டிருக்கிறார்கள் . இவர்கள் தங்களுடைய நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும். தாங்கள் யார்,  இந்துமதக் கலாச்சாரத்தில் எத்தகைய பங்கு கொடுக்கப்பட் டிருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார் - அவர்களின் பஞ்சமர் பட்டம் போகாமல் உன்னுடைய சூத்திரன் பட்டம் போகாது; அவனுக்காவது ஐந்தாமிடம் என்ற ஒரு தெளிவான இடம் இருக்கிறது. ஆனால் நீ யார்? பார்ப்பனர் களின் வைப்பாட்டி மகன் என்று கூறுகிறான். அதில் மிகப் பெருமை அடைகிறாயா என்று நெற்றியில் அறைந்ததைப்போல் கேட்டார்.
தஞ்சை வெண்மணியிலே என்ன கொடுமை நடந்தது என்று உங்களுக்கு தெரியும். ஒரு அரைப் படி நெல் அதிகமாக கேட்ட காரணத்தினாலேயே துள்ள - துடிக்க பெண்களும் குழந்தைகளும் சேர்த்து எரிக்கப்பட்டார்களே  -அந்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றது; இவ்வளவு பேர் எரித்து கொள்ளப்பட்டதற்கு காரணமான கோபால கிருஷ்ண நாயுடு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தால் விடுவிக்கப்பட்டார். அதற்கு அந்த நீதிபதி என்ன விளக்கம் கொடுத்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? கோபாலகிருஷ்ண நாயுடு பணக்காரர், அவருக்கு இரண்டு கார் இருக்கிறது, அவரே நடந்து போய் குடிசைக்கு தீ வைத்தார் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை, என்று சொல்லி விடுவித்தார்கள். ஆக நம்முடைய நீதிபதிகள் மனதில்கூட எப்படி இந்த மனுநீதி சொல்லுகின்ற நியதிகள் சென்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையிலே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பேசியிருக்கிறார் பெண்கள் இருக்கவேண்டிய இடம் வீடு, அவர்கள் தங்களுடைய வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துகொண்டுதான் பிறகு வேலைகளுக்கு செல்லவேண்டுமே தவிர, வீட்டைப் புறக்கணித்துவிட்டு வெளி வேலை களுக்கு செல்ல கூடாது என்று தன்னுடைய திருவாய் மலர்ந்திருக்கிறார் என்றால் பெண்கள் இருக்கவேண்டிய இடம் வீட்டிலே இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது என்று சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற கருத்துக்களிலிருந்து இவர்களுடைய கருத்துக்கள் எந்த வகையிலே மாறுபட்டிருக்கின்றது என்று நான் கேட்கிறேன். எனவே தான் இந்த காலகட்டத்திலும் நாம் மனுவை பற்றி பேசவேண்டியிருக்கிறது சாஸ்திரங்களை பற்றி பேசவேண்டியிருக்கிறது புராண இதிகாச புளுகுமூட்டைகள் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இவைகளெல் லாம் நம் சமுதாயத்தின் நாடி நரம்புகளில் நஞ்சைக் கலந்திருக்கின்றன. அந்த நஞ்சை எப்படி வெளியே எடுப்பது என்பதற்கான ஒரு தேவை தான் பெரியாரியம் என்று நாம் சொல்லுகிறோம்.
இந்த பெரியாரியம் என்ற மருந்து உள்ளே செல்ல செல்ல நஞ்சு வெளியேறிவிடும். நாடி நரம்புகளில் சுத்த இரத்தம் ஓடத் தொடங்கும். அந்த சுத்த இரத்தம் தான் மனிதனை மனிதனாக உணரச் செய்யும். மனிதனை ஜாதியாளனாகவோ, உத்தியோகஸ் தனாகவோ, பணக்காரனாகவோ, படித்த வனாகவோ உணர்வது என்பது இரண்டாவது இடம். மனிதனை மனிதனாக –- ஆறறிவுக்கு சொந்தக்காரனாக - அனைத்து உரிமைக்கும் சொந்தக்காரனாக - சமத்துவ வாழ்க்கை நடத்து வதற்கு உரிமை உள்ளவனாக உணரச்செய்ய வேண்டும் சக மனிதனைப் பற்றி புரிந்துகொள்ளாத ஒரு மனிதன் வாழ்ந்தால் என்ன - வீழ்ந்தால் என்ன?. சக மனிதனை புரிந்துகொள்ளாததற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் இந்த சாஸ் திரங்களும் மனுதர்மங்களும் செய்திருக்கின்றன.

எனவே தான் மனிதனை மனிதனாக நடத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்றால் முதலில் இவைகள் செலுத்தியிருக்கின்ற இந்த நஞ்சை விசத்தை, இந்த சமுதாயத்தின் பொது புத்தியில் இருந்து – ஒரு தனி மனிதனுடைய பொது புத்தியில் இருந்து வெளியேற்றுங்கள். அப்படி வெளியேற்றுவதற்கு பெரியாரியல் என்ற விசமுறிவு பயன்படும். எனவே இந்த விசமுறிவை பயன்படுத்தி நஞ்சை நீக்குங்கள் என்று குரல் கொடுத்து பெரியாரிய லாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே நம்முடைய அடிமை நிலைக்கும், நம்முடைய இழிந்த நிலைக்கும் காரணமாக அவன் மொழியைக் கையாண்டான், மூடநம்பிக்கையைக் கையாண்டான், பக்தியைக் கையாண்டான், கடவுள் என்ற ஒன்றை கற்பித்தான். மனித உரிமைகளை ஒரு சாராருக்கு அடியோடு மறுத்தான். இவைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, அவன் எதையெதை மறுத்தானோ அதையெல்லாம் பெறுவோம்; அவன் எதையெதை கற்பித்தானோ அந்த கற்பிதத்தை மறப்போம் - மறக்க முயலுவோம். பெரியாரியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வோம், அப்பொழுதான் உலகத்திலுள்ள மற்ற நாட்டிலுள்ள சுதந்திர மடைந்த மக்களைப் போல் நாமும் மானமும் அறிவும் உள்ள ஒரு சமுதாயமாக மலரமுடியும். அப்படி மலருவதற்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் அதுதான் நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்க முடியும்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

ஜக்கியின் அபார அறிவு

ஆப்பிரக்காவில் பிறந்தயானை ஆப்பிரக்கா யானைன்ன
இந்தியாவுல பொறந்த யானை இந்து யானை
என்றகிறான் ஜக்கி

ஆர்எஸ்எஸ் காரன் கூட
இந்தியாவில பொறந்த மனுஷனைத்தான் இந்துன்னான்

இவன் யானையையே இந்து யானை
எலி இந்து எலி என்கிறான்

அவனைவிட இவன் ரொம்ப ரொம்ப ஆபத்தானவன்

வெள்ளி, 3 மார்ச், 2017

இந்து என்று சொல்லாதே இழிவை தேடி கொள்ளாதே

சத்திரியர்களும், வைசியர்களும் பரசுராமனால் அழித்தெழிக்கப் பட்டதாக மகாபாரதத்தில் கிருஷ்ண உபதேசத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எஞ்சி இருப்பது பார்ப்பனர்களும் சூத்திரர்களும் மட்டுமே. மேலதிக தகவல் 80களில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்களுக்கு இந்து செட்டியார் வைசியர் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்பொழுது நான்கு வர்ணத்திற்கும் அடிப்படையே பகவத் கீதையின் தான் என குறிப்பிட்டு யாரையும் வைசியராகவோ சத்திரியராகவோ அங்கீகரிக்க முடியாது என தீர்ப்பளித்தனர். ஒரு பார்ப்பனர் இந்து ஐய்யங்கார் பிராமணர் என சான்றிதழ் பெற இயலும் ஆனால் இந்து கள்ளர் (அ) நாயுடு (அ) வன்னியர் (அ) கவுண்டர் சத்திரியர் என சான்றிதழ் பெற இயலாது. வன்னியர்களில் ஒரு பிரிவினர் தங்களது ஜாதி பெயரை வன்னிய குல சத்திரியர் என மாற்றி கொண்டனர் வேண்டுமானால் அது போல் மாற்றி கொண்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அதாவது சுபாஷ் சந்திர போஸ் என்ற எனது பெயரை கோடீஸ்வரன் சுபாஷ் சந்திர போஸ் என கெசட்டில் மாற்றி கோடீஸ்வரனாக மாறுவதை போல. இந்து என்ற பொது பெயருக்குள் பிராமணர் சூத்திரர் என்ற இரு பிரிவுகள் மட்டுமே உள்ளது.
இதனால் தான் தந்தை பெரியார் இந்து என்று சொல்லாதே இழிவை தேடி கொள்ளாதே என்றார்.

வியாழன், 2 மார்ச், 2017

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு

புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ம.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு.
பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்?
- இப்படி ஒரு வாதம்.
நமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல.
சற்று வரலாற்றைப் பார்ப்போமா?
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர்.
இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை சித்தாந்தமாக பார்ப்பனர்கள் பிரிட் டிஷாரிடம் ‘மனுதர்ம’ நூலை அளித்தனர். பார்ப்பனரும் பிரிட்டி ஷாரும் சேர்ந்து உருவாக்கியதே இந்து மதமும், அதற்கான மதக் கூறுகளும். அம்பேத்கர் உருவாக்கியது அல்ல. இதுவே வரலாறு.
இறந்து போன காஞ்சி மடத்தின் மூத்த சங்கராச்சாரியே இதற்கு சாட்சி. இதோ அவரே கூறுகிறார்:
“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றி யது.” (நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266)
பிரிட்டிஷ்காரன் கொடுத்த பெயர்தான் இந்து மதம். அம்பேத்கர் கொடுத்த பெயர் அல்ல.                     
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)