வியாழன், 3 டிசம்பர், 2015

பிள்ளையாருக்கு விடுமுறையா??

   
  பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம். இது என்ன காலத்தின் கொடுமை. 2014ம் ஆண்டுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம். ஆனால் தற்பொழுது 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்தியை இணைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்குமானால் இது மிகவும் வருத்தத்திற்குரியது.

மதப் பண்டிகைகளிலேயே மற்ற பண்டிகைகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற பண்டிகைகளை மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ யாருக்கும் எந்த இடைய10றும் இல்லாமல் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த பிள்ளையார் சதுர்த்தி மட்டும் மதவெறியர்கள் கைகளில் சிக்குண்டு அது மதவெறியைத் தூண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. உண்மையான பக்தர்கள் மிகச்சிறிய பிள்ளையார் பொம்மையை களிமண்ணால் செய்து தங்கள் வீட்டு கிணற்றிலோ குளங்களிலோ கரைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது மதவாதிகள் அதைக் கையிலெடுத்து 50 அடி 60 அடி என்று பிள்ளையார் பொம்மைகளைச் செய்து வீதிக்கு வீதி மூலைக்கு மூலை சந்துக்கு சந்து என்று நான்கு நாள் அய்ந்து நாள் என்று வைத்து ஊர்வலம் செல்வதாகப் பெயர்பண்ணி எங்கெல்லாம் மசூதி இருக்கிறதோ எங்கெல்லாம் இஸ்லாமியர் அதிகம் குடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊர்வலமாகச் சென்று இஸ்லாமியருக்கு எதிராக முழக்கமிட்டு மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அவர்களிடம் பக்தி என்பது எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பது மதவெறியே!

இந்த விநாயருக்கு விடுமுறை விடுவது என்பது அத்தகைய மதவெறியர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையுமே தவிர இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. விருப்ப விடுப்பு நான்கு நாள் வருவதால் தொழிலாளர்களுக்கு அதனால் இலாபம்தான். ஏற்கனவே நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு விடப்பட்டதற்கான ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றது. கடந்த 2011ம் ஆண்டு நமக்கு நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப விடுப்பு இருந்தால் எத்தனையோ ஈட்டிய விடுப்புக்களும் மருத்துவ விடுப்புக்களும் தொழிலாளர்களுக்கு மீதம் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. தனக்குத் தேவையான நாட்களில் ஊழியர்கள் விருப்ப விடுப்பினை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதைவிடுத்து ஏன் மதப் பண்டிகைக்கு விட வேண்டும். ஏதாவது ஒரு விடுமுறை விட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் இந்நிறுவனம் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளுக்கு விடலாமே! 

நாட்டில் இன்னும் மதவாத செயல்கள் தலைவிரித்தாடுகின்றதே. சகிப்பின்மை பற்றி பாராளுமன்றமே முடங்கும் அளவுக்கு நாட்டில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடத்தான் வேண்டுமா? 

அனைத்து உறுப்பினர்களும் இதனை ஒத்துக் கொள்ளாமல் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறபோது பெரும்பான்மை என்று கூறி இதனை அமுல்படுத்துவது சரியாக இருக்குமா என்பதை பணிக்குழு உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிக்கு இடம் தர வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சார்ந்த பணிக்குழு உறுப்பினர்கள் இதனைப் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு;கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக