புதன், 14 செப்டம்பர், 2016

என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார்:


நவீன குலக்கல்வி :
தமிழகத்தை ஆண்ட நீதிக்கட்சி ஆட்சி கல்வி வேலைவாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் கண்டனர். 1952ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டத்தை அமுல்படுத்தினார். அதன்படி அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்தால் போதும். அரை நேரம் படிப்பு அரை நேரம் குலத்தொழில் என்கின்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. தந்தை பெரியார் அதனைக் கடுமையாக எதிர்த்ததன் மூலமாக குலக்கல்வித்திட்டம் அன்று ஒழிக்கப்பட்டது.
ஆனால் அதனை தொழிற்கல்வி என்றும் அதனை அமுல்படுத்தியிருந்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இருந்திருக்காது என்றும் இன்னமும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவர்கள்தான் இன்று ஆட்சி அதிகாரத்திலே இருக்கிறார்கள். அவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் இருப்பதனால் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை வேறு வடிவத்தில் திணிக்க முயலுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது அதனுடைய மறுவடிவமே. அதன்படி நவீனமான முறையில் குலக்கல்வி திணிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்ற திட்டத்தை மாற்றி அய்ந்தாம் வகுப்புவரை என்று ஆக்கி மாணவர்களின் கல்விக்கண் குருடாக்கப்படுகிறது. எட்டாம் வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெறாதவர்கள் தொழிற்கல்வி என்ற பெயரால் பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை. இதிலே பாதிக்கப்படப் போவது கிராமப்புறத்திலுள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளும் நகர்ப்புறத்திலே உள்ள அடித்தட்டு உழைப்பாளிகளுடைய பிள்ளைகளும்தான்.
இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் என்பதனை சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்கள் சுட்டிக்காட்டி அதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தந்தை பெரியார் ஆவார். எனவே தந்தை பெரியார் அவர்கள் இப்பொழுது மேலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.
சமஸ்கிருதத் திணிப்பு:
அத்தோடு 1938ல் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முதல்முறையாக வாய்ப்புக் கிடைத்தபொழுது இராஜகோபாலாச்சாரி இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். அதற்கு அவர் சொன்ன காரணம் சமஸ்கிருதத்தை தேசியமொழி ஆக்க வேண்டும். அதற்கு இடைக்காலமாக இந்தியை இப்பொழுது கட்டாயம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸ் சினுடைய மொழிக் கொள்கையும் அதுதான். அதாவது சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசியமொழியாக இருக்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக இந்தி இருக்கலாம் என்பதுதான்.
இந்தியை தேசியமொழியாக ஆக்க வேண்டும் என்று சொன்னதற்கு அதன் ஆதரவாளர்கள் சொன்ன காரணம் இந்திதான் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படுகிறது. அதனால் அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தியாவில் உள்ள எந்த மாநில மக்களாலும் பேசப்படாத செத்தமொழியான சமஸ்கிருதத்தை இப்பொழுது தேசியமொழியாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் முரண்பாட்டின் மொத்த வடிவமான ஆரியர்கள்.
அவர்கள்தான் இப்பொழுது சமஸ்கிருதத்தை தேசியமொழி ஆக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னவர்கள் இப்பொழுது எதற்காக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கிறார்கள்? சமஸ்கிருதம் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? சமஸ்கிருதத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே வேலை அர்ச்சகர் பணிதான். அந்த வேலை அனைத்து ஜாதி மக்களுக்கும் கிடைக்குமா? என்றால் அதற்கும் பதில் இல்லை.
சமஸ்கிருதத்தை தேசிய மொழி ஆக்குவதனுடைய நோக்கம் அது ஆரியப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது. வருணாசிரமத்தை நிலைநாட்டும் சாஸ்திரங்கள்ää வேதää புராண இதிகாசங்கள் எல்லாம் சமஸ்கிருத்திலேதான் இருக்கிறது என்பதால்தான் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவத்தை உண்டாக்குகிறார்கள்.
அந்த சமஸ்கிருதத்தையும் அவர்கள் நிலைநாட்ட விரும்புகிற ஆரியப் பண்பாட்டையும் வருணாசிரமத்தையும் இங்குத் தலைகாட்ட விடாமல் செய்ய வேண்டுமானால் தந்தை பெரியார் இன்னும் முழு வீச்சில் தேவைப்படுகிறார்.
கடவுள் மத எதிர்ப்பு:
அதேபோல இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள் கின்னரர் கிம்புருடர் என்று கோடிக்கணக்கில் கடவுள்கள் இருந்தாலும் தந்தை பெரியார் இரண்டு கடவுள்களை மிகவும் கடுமையாக எதிர்த்தார். ஒன்று பிள்ளையார். இன்னொன்று இராமன். ஏன் இந்த இரண்டு கடவுள்களை அதிகம் எதிர்த்தார் என்பதற்கு கண்கூடான சாட்சியமாகத்தான் பிள்ளையார் ஊர்வலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதன் நோக்கம் பக்தியோ கடவுள் சக்தியோ அல்ல. மாறாக இஸ்லாமியர் வசிக்கும் தெருக்களிலும் மசூதி வழியாகவும் ஊர்வலமாகச் சென்று தாரை தப்பட்டை முழங்கி இஸ்லாமியருக்கு எதிரான முழக்கங்களைச் செய்து மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதுதான்.
அதேபோல இராமனுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற பெயரால் அயோத்தியிலிருந்த நானூறு ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதியை இடித்து இன்றைக்கும் மதக்கலவரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்களின் நூற்றைம்பது ஆண்டுக்கனவான சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்கää  இல்லாத இராமன் பாலத்தை இருப்பதாகச் சொல்லி முட்டுக்கட்டை போட்டு வருபவர்கள் இராமபக்தர்கள்.
அதனால்தான் தந்தை பெரியார் மிகவும் தொலைநோக்கோடு அந்த இரு கடவுளர்களையும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அந்த மதவெறியர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் பெரியார் மிகமிக அதிகம் தேவைப்படுகிறார்.
தீண்டாமை ஒழிப்பு:
நம்முடைய மக்களிடம் நிலவுகிற தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி ஒழிய வேண்டும். அந்த ஜாதி ஒழிய வேண்டுமானால் அந்த ஜாதியைப் பாதுகாக்கிற மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் அந்த மதத்தைப் பாதுகாக்கும் சாஸ்திர வேத புராண இதிகாசங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவையெல்லாம் ஒழிய வேண்டுமானால் அவற்றைப் பாதுகாக்கிற கடவுள் ஒழிந்தாக வேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஆனாலும் அந்தத் தீண்டாமைக் கொடுமை ஒழிந்தபாடில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் அரியானா மாநிலத்தில் பசுவின் தோலை உறித்தார்கள் என்பதற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜாதி வெறியர்களால் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட்டார்கள். அதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பின.
அதே நிலை இன்னும் நீடிக்கச் செய்வது வெட்கத்திலும் வெட்கப்பட வேண்டிய கேவலமான நிலை. வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லப்பட்ட மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பசுவின் தோலை உறித்ததற்காக அவர்களைக் கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்யும் காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இதனைப்பற்றிக் கருத்துக் கூறவந்த பிரதமர் மோடி அவர்கள் ~தலித்துக்களைத் தாக்காதீர்கள். அதற்குப் பதிலாக என்னைச் சுடுங்கள்| என்று கூறினார். அவர் சொல்லி முடித்து ஓரிரு நாட்களிலேயே ஆந்திராவில் அதேபோல தலித் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது.
ஜாதி ஒழிப்பு:
அதேபோல ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு மற்றொரு வழி கலப்பு மணமே என்று தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கூறினார்கள். ஆனால் இன்று கலப்புமணம் புரியும் இளைஞர்களும் பெண்களும் கவுரவக்கொலை என்ற பெயரால்  ஜாதி ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர்.
இந்த தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதி ஆணவக் கொலைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் அதற்கு பெரியார் மிகமிக அவசியம் தேவைப்படுகிறார்.
மேலும் கல்வி வேலைவாய்ப்புக்களில் உள்ள இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டவும் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களான அய்அய்டிää அய்அய்எம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நுழைய விடாமலும் செய்வதற்கு மிகப்பெரிய சதிவேலைகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இவற்றையெல்லாம் அடைவதற்கு தந்தை பெரியார் கொள்கைகளை அவனியெங்கும் கொண்டுசெல்ல அவரது 138வது பிறந்தநாளான செப்டம்பர் 17ல் உறுதியேற்போம்.
வாழ்க பெரியார்!                   வளர்க பகுத்தறிவு!!
     இவண்:
பெல் திராவிடர் தொழிலாளர் கழகம்ää திருச்சி 14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக