புதன், 14 செப்டம்பர், 2016

பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்

தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும்ää மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்று புரட்சிக்கவிஞர் அவர்களால் பாராட்டப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் தந்தை பெரியார் வயதில் அறிவில் முதியாராக இருந்தாலும் வாய்மைப்போர் நடத்துவதில் என்றும் இளைஞராக இருந்து இந்த சமுதாயத்தைத்திருத்தி உலிகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப்போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுகின்ற பணியை தன் வாழ்நாள் முழுதும் செய்தார். அவர் வாழ்நாளில் தன்னுடைய இலட்சியங்கள் நிறைவேறுவதைப்பார்த்து விட்டு இறந்தாலும் இன்னும் அவருடைய கருத்துக்கள் நாட்டு மக்களுக்குத்தேவை என்பதை அனைவரும் உணர்கின்றனர்.
எனக்கு மொழிப்பற்றில்லை@ ஜாதிப்பற்றில்லை@ இனப்பற்றில்லை@ நாட்டுப்பற்றில்லை. எனக்கிருப்பதெல்லாம் மனிதப்பற்றே என்று சொல்லி இந்த சமுதாயத்திற்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த தலைவர் தந்தை பெரியார். நம்நாட்டில் நிலவும் தீண்டாமைக்கெதிராகவும் ஜாதிக்கு எதிராகவும் பெண்ணடிமைக்கெதிராகவும் கடுமையாகப் பாடுபட்டார். அவருடைய உழைப்பால் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நிலவிய ஜாதி வெறியும் தீண்டாமைக் கொடுமையும் பெண்ணடிமைத்தனமும் மறைந்திருந்தாலும் அது இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.
மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை உலகில் வேறு எங்கும் காணமுடியாத கொடுமையாகும். எனவே அதனை முற்றாக ஒழிப்பதுதான் மனிதாபிமானம் உடையவர் கடன் என்று அவர் உழைத்தார். ஆனால் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் இரட்டைக்குவளை முறை இருக்கிறது. டீக்கடையில் ரெட்டக்குவள இன்னும் ஏனுங்க சாராயக்கடையில்கூட ஒத்தக் குவளங்க@ என்று பாடக்கூடிய அளவுக்கு தீண்டாமை நோய் முற்றிலும் ஒழியாமல் இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஜாதிக்கொரு வீதி@ ஜாதிக்கொரு சுடுகாடு என்ற நிலை நிலவி வருகிறது. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட தோழர்களைக் கல்லாலேயே அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என்றால் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார் என்பதையே அது இன்னும் உணர்த்துகிறது.
விடுதலை பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டை விடுதலை பெற்ற நாடாகக் கருத முடியுமா? என்று கேள்வி கேட்டார். ஆனால் ஜாதி தனது பிடிமானத்தை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மணமக்கள் தேவை என்கின்ற விளம்பரங்களைப் பார்க்கின்ற பொழுது நமது நாட்டில் என்னென்ன ஜாதிகள் ஜாதிகளுக்குள் ஜாதிகள் உட்பிரிவுகள் குலம் கோத்திரம் எல்லாம் எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. எனவே அத்தகைய ஜாதி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமானால் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
ஜாதியை ஒழிக்க பெரியார் சொன்ன வழிகளில் ஒன்று ஜாதிப் பட்டங்களைத் தூக்கி எரிய வேண்டும் என்பது. அவருடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட தமிழகத்தில் இன்று பலரும் ஜாதிப் பட்டங்களைப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதில் வெட்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மிகப்பெரிய தலைவர்களாகக் கருதக்கூடிய அரசியல்வாதிகள்கூட சட்டர்ஜிää பானர்ஜிää முக்கர்ஜிää திரிபாதி என்ற ஜாதிப் பெயர்களால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள். எனவேää வடமாநிலங்களிலும் பெரியாருடைய தேவை அதிகமாக இருக்கிறது. எனவே பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
மனிதசமுதாயம் முன்னேற ஜாதியும் தீண்டாமையும் ஒழிவது எப்படி முக்கியமோ அதைவிட முக்கியமானது மனிதகுலத்தில் சரிபகுதியாக இருக்கிற பெண்களின் அடிமைத்தனம் ஒழிவதும் மிகமிக முக்கியம் என்றார் பெரியார். ஆண்களைப் போலவே பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சரிசமமாக வாய்ப்புக்களைப்பெற வேண்டுமானால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 50 சதவிகிதம் அல்ல 33 சதவிகிதத்துக்கே நீண்ட காலம் போராட வேண்டிய அவலம் உள்ளது. எனவே பெண்ணுரிமை பெறுவதற்கும் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
பெண்கள் விடுதலை அடையாமல் இருப்பதற்கு அவர்களுக்கு நகைகளின் மீதும் உடைகளின் மீதும் இருக்கும் மோகமே அடிப்படைக்காரணமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய பெரியார் பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரமாகவோää நகைமாட்டும் ஸ்டாண்டாகவோ இருக்கக்கூடாது என்றார். ஆனால் இன்னமும் பெண்களுக்கு அந்த நகைகளின்மீதும் ஆடை ஆபரணங்கள்மீதும் உள்ள மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இன்று வரதட்சணைக் கொடுமைகளும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த மோகங்களையும் அடிமைத் தனங்களையும் ஒழித்து பெண்கள் உண்மையான விடுதலை பெற வேண்டுமானால் பெரியார் மிகமிகத் தேவைப்படுகிறார்.
எதையும் மகான் சொன்னார் என்பதற்காகவோ மகரிஷி சொன்னார் என்பதற்காகவோ அப்படியே நம்பிவிடாதே. உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி சிந்தித்து நட என்றார் பெரியார். ஆனால் இன்றைக்கு ஒரு மோசடிப்பேர்வழி சாமியார் என்ற போர்வையில் குண்டலினியோகத்தால் உங்களையெல்லாம் அந்தரத்தில் மிதக்கவிடப்போகிறேன் என்று சொன்னவுடன் அது எப்படி சாத்தியமாகும் என்று கூட சிந்திக்காமல் அவர் சொன்னபடி குதித்துக்குதித்துக் குப்புற விழுந்தார்களே தவிர யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. அதே போல் கல்லுப்பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று செய்தி பரவியவுடன் அய்ஏஎஸ் அதிகாரிமுதல் அய்பிஎஸ் அதிகாரிகளும் டாக்டர்களும் எஞ்சினியர்களும்கூட பால் சொம்பைத்தூக்கிக் கொண்டு ஓடினார்களே தவிர பிள்ளையார் எப்படிப் பால் குடிப்பார் என்று கேட்கவில்லை. எனவே நாட்டு மக்கள் பகுத்தறிவு பெற பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
நம்நாட்டு மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது அவர்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளே என்று சொன்ன பெரியார் அந்த முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கையை முறியடிக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். ஆனாலும் இன்னமும் படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்வரை நேர்த்திக்கடன் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைப்பதும் பேய் ஓட்டுவதும் பிசாசு ஓட்டுவதும் என்ற செயல்களைச் செய்து வருவதும் திருவிழா தேர் போன்ற காரியங்களில் காசைக்கரியாக்குவதுமான செயல்;கள் நடைபெற்றே வருகின்றன. எனவே சமுதாய மக்கள் மூடநம்பிக்கை ஒழிந்து பகுத்தறிவுபெற்ற மக்களாக மாற பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
நம்முடைய சமுதாயத்தில் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்புக்களில் மற்ற மக்களுக்கு இணையாக உயரும்வரை அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் பெரியார். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. தப்பித்தவறி அந்நிறுவனங்களில் சேர்ந்து படிக்கச் சென்ற மாணவர்கள் அங்குள்ள ஆதிக்கசாதி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கேலி செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தகவல் அனைவர் நெஞ்சையும் பிளப்பதாக உள்ளது. எனவே அனைத்து மக்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் சமமான கல்வி கிடைக்க பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
இந்துமதத்தில் முப்பத்தி முக்கோடி தேவர்கள் கின்னரர் கிம்புரடர் நந்தி நாரதர் சிவன் விஷ்ணு பிரம்மா காளியாயி மாரியாயி என்று எத்தனையோ எண்pலடங்காக் கடவுளர் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பிள்ளையாரையும் இராமனையும் தேர்ந்தெடுத்து இராமனை செருப்பால் அடித்தார். இராமாயணத்தைக் கொளுத்தச்சொன்னார். அதேபோல் பிள்ளையார் சிலையைத் தெருவிலே  போட்டுடைத்தார். அவருடைய தொலைநோக்கு சிந்தனை எத்தகையது என்பதை இதிலிருந்து நாம் உணரலாம். மதவாதிகள் இன்று இந்த இரண்டு கடவுளரையும் வைத்துத்தான் நாட்டில் கலவரங்களை நடத்தி வருகிறார்கள். பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால் மசூதி இருக்கும் தெருவழியாகச் சென்று மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அதேபோல இராமனை மய்யமாக வைத்து இந்திய அரசியலே நகர்த்தப்படுகிறது. தமிழகத்தின் நூற்றைம்பது ஆண்டுக்கனவான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்காக அங்கே இராமன் கட்டிய பாலம் இருப்பதாகவும் அதனை இடிக்கக் கூடாது என்றும் மதவாதிகள் வழக்குப் போட்டார்கள். நீதிமன்றமும் அதற்கெல்லாம் ஆதாரம் எதையும் கேட்காமல் வெறும் நம்பிக்கை என்ற வாதத்தைக் கேட்டு சேது சமுத்திரத்திட்டத்துக்குத் தடை போட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெரியார் அல்ல@ இன்னும் நூறு பெரியார் தேவை என்பது புலனாகிறது.
தந்தை பெரியாரின் நிறைவேறாத இறுதி ஆசையாகச் சொல்லப்படுவது அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. வீதிகளில் ஒடுக்கப்பட்டவர் நடக்கக்கூடாது என்று சொன்ன ஜாதிப்பாம்பை தந்தை பெரியார் அடித்து விரட்டினார். அது அங்கிருந்து ஓடிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க உரிமையில்லை என்று சொன்ன அந்த ஜாதிப்பாம்பை பெரியார் அடித்தார் அங்கிருந்தும் ஓட்டம் பிடித்தது. வேலைவாய்ப்புப்பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தகுதியில்லை என்று சொன்ன ஜாதித்திமிர் பிடித்த பாம்பை அவர் அடித்து விரட்ட அந்தப்பாம்பு அங்கிருந்தும் ஓடியது. கடைசியில் அந்தப் பாம்பு புகுந்து கொண்டு தன் நச்சுப்பல்லைக் காட்டும் இடமாக அமைந்திருப்பது கோயில் கர்ப்பக்கிரஹம் என்பதைக் கண்டுணர்ந்த பெரியார் அங்கிருந்தம் அந்தப் பாம்பை விரட்ட வேண்டுமானால் அங்கேயும் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே சென்று சாமியைத் தொட்டு வணங்கி பூஜை செய்யும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்றார். அதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றி அதற்கான பயிற்சி கொடுத்து அவர்களைப் பணியில் அமர்தத் தயாராக இருந்தும் அவர்களுக்கான அர்ச்சகர் உரிமையைப் பெற விடாமல் அந்தப் பாம்ப தடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே அந்த ஜாதிப்பாம்பை மீண்டும் உயிர்பெற்றெழ விடாமல் அடிக்க வேண்டுமானால் பெரியாரின் கைத்தடிதான் அதற்குச் சரியான ஆயுதமாகும். எனவே சமுதாயத்தில் இன்னும் நிலவிக்கொண்டிருக்கும் அத்தனைக் கேடுகளையும் ஒழித்துக்கட்ட பெரியார் தேவைப்படுகிறார். தேவைப்படுகிறார் தேவைப்படுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக