வியாழன், 13 அக்டோபர், 2016

சமமாக இருந்தால் சகித்துக் கொள்வார்களா பார்ப்பனர்கள்?

பௌத்தம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு முன்னால் பார்ப்பனீயம் கோலோச்சி வந்தது. வேள்விகள் என்ற பெயரால் ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளைக் கொன்று தீயில் போட்டுப் பொசுசு;கி அதன் இறைச்சியை உண்டு வந்தார்கள் பார்ப்பனர்கள். சோம பானம், சுரா பானம் ஆகியவற்றை அருந்தி போதையில் திளைத்தார்கள். வருணாசிரமம் என்ற பெயரில் ஏற்றத் தாழ்வுகள் நிலவின. இதையெல்லாம் எதிர்த்து இயக்கம் கண்டவர்தான் கவுதம புத்தர்.

அவருடைய கொள்கைகளை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். இந்தியாவை கிட்டத்தட்ட ஒரே குடையின்கீழ் ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் பௌத்த மதம் அரச மதமாக விளங்கியது. அவருடைய ஆட்சியில் பார்ப்பான் இல்லை. பறையன் இல்லை. சக்கிலி இல்லை. தோட்டி இல்லை. வண்ணான் இல்லை, பரியாறி இல்லை. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித்தியாசமும் இல்லை. அனைவரும் சமமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

சமமாக இருந்தால் சகித்துக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? பௌத்தம் வருவதற்கு முன் தங்கள் இனத்திற்குக் கிடைத்து வந்த பெருமையை தனிச்சிறப்பை எண்ணிஎண்ணிப் புழுங்கிக்கிடந்தார்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் அடையத் தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தார்கள். அசோகரின் பேரன் பிருஹத்ரதன் சற்று பலகீனமானவனாக இருந்தான். அவனுக்கு புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பான் படைத் தளபதியாக இருந்தான். மன்னன் சற்று அயர்ந்த நேரம் பார்த்து அவனைக் கொன்று விட்டு தானே மன்னன் என்று பறைசாற்றிக் கொண்டான் புஷ்யமித்திரன்.
அவன் பதவியேற்று மனுஸ்மிருதியை புதுப்பொலிவுடன் தொகுத்தான்.
~இந்த உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம். மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர் தயவில்தான் உயிர் வாழ்கின்றனர். சூத்திரனுக்கு செல்வம் சேர்க்க உரிமையில்லை. அப்படி அவன் செல்வம் சேர்த்திருந்தால் அதனைப் பார்ப்பான் வலுவில் கவர்ந்து கொள்ளலாம். பார்ப்பனரல்லாத அனைவரும் கடவுளை நேரடியாக வணங்கக் கூடாது. பார்ப்பனரைத்தான் கடவுளாக வணங்க வேண்டும். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுத்தலாகாது| என்பது போன்ற சட்டங்களை பார்ப்பனர்கள் எழுதிக் கொண்டார்கள்.

இந்த சட்டங்கள்தான் ஈராயிரம் ஆண்டாய் இந்த நாட்டில் கோலோச்சியது. எந்த மன்னனும் இந்த சட்டத்தில் கைவைக்க முடியாது. முஸ்லிம் மன்னர்கள்கூட இதில் கைவைக்க முன்வரவில்லை. அதனால் பார்ப்பனர்கள் படு குஷியுடன் காலம் கழித்தனர். வெள்ளைக்காரன் காலத்திலும் அது தொடர்ந்தது. இன்னமும் வடநாட்டில் பார்ப்பானையே கடவுளாக வணங்குகிற கூட்டம் இருந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அந்த நிலையில் தலைகீழ் மாற்றம். பார்ப்பனர் யாரும் முன்புபோல சிண்டு வைத்துக்கொள்ளவோ, பஞ்சகச்சம் கட்டிக் கொள்ளவோ முன்வருவதில்லை. எல்லோரையும் போல கிராப்பு வைத்துக் கொள்கிறார்கள். பேண்ட் போட்டுக் கொள்கிறார்கள். பார்ப்பான் என்பதற்காகத் தனி மரியாதையை யாரும் தருவதில்லை.

பார்ப்பன இனத்தின் பெருமையை மீண்டும் தக்க வைக்க உருவாக்கப்பட்டதே ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தின் ஊர்வலம் துவாக்குடியில் நடந்திருக்கிறது. அதைப் பார்ப்பான் துவக்கி வைத்தால் குட்டு வெளியாகும் என்பதால் கூலிக்கு ஆள்பிடித்து துவக்கி வைத்திருக்கிறார்கள். அவர் அருந்ததியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராம். இவர்தான் அம்பேத்கர் சங்கத்தில் ஒரு காலத்தில் தலைவராக இருந்திருக்கிறார்.

மனிதமலத்தை மனிதன் தலையில் சுமப்பது அவரவர் கர்மவினை என்ற தத்துவத்தைக் கொண்ட இந்துத்துவா கும்பலின் ஊர்வலத்தை இவர் துவக்கி வைப்பது எதற்காக? அருந்ததியரும் அய்ஏஎஸ் ஆகலாம் என்ற இட ஒதுக்கீட்டைக் கொணர்ந்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பார்களாம். மனித மலத்தைத் தலையில் சுமப்பது கர்மயோகம் என்ற தத்துவத்தைக் கொண்ட இயக்கத்தையும் ஆதரிப்பார்களாம். என்னே இரட்டை வேடம்? இதைவிட வெட்கக் கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா? அம்பேத்கர் கற்பி,ஒன்றுசேர்,போராடு என்று சொன்னார். யாரை எதிர்த்துப் போராடச் சொன்னாரோ அவர்களோடு கூட்டுச் சேர்கிறார் என்றால் இதைவிட அம்பேத்கருக்குச் செய்யும் துரோகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? சிந்திப்பீர்! இதுபோன்ற புல்லுருவிகள் யாரும் இருந்தால் அடையாளம் காண்பீர்!! அவர்களை அந்நியப்படுத்துவீர்!! அப்போதுதான் உண்மையான சமுதாய விடுதலை கிட்டும்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக